வெள்ளி, 5 செப்டம்பர், 2014

பிடித்த பத்து

எழுத்துக் கூட்டி தமிழ் வாசிக்க ஆரம்பித்த வயது முதல் இன்று வரை எனக்குப் பிடித்த பத்து புத்தகங்கள் இவை.

இதிகாச புராணம்

1. வியாசர் விருந்து - மூதறிஞர் ராஜாஜி அவர்கள் தமிழில் எழுதிய மகாபாரதம். ஒரு கதைக்குள் பல கதை, பல கதைக்கும் ஒரு விதை என்று ஆழ்ந்து அகன்று விளங்கும் பாரதக் கதையைப் புரிந்து கொள்ள, எந்த ஆரம்ப நிலை வாசகனுக்கும் கட்டாயமாக மிக உதவியாக இருக்கும் நூல். அநேகமாக வியாசர் காட்டும் எல்லாப் பாத்திரங்களையும் விடாமல் ராஜாஜி இந்த நூலில் காட்டி இருப்பார்.

2. காவ்ய ராமாயணம் -  டெல்ஹியை சேர்ந்த K S ஸ்ரீநிவாசன் என்பவர் எழுதிய புத்தகம் இது. இந்தியாவின் புகழ் வாய்ந்த ராமாயணங்கள் மூன்று. வடமொழியில் ஆதிகவி வால்மீகி எழுதியது, தமிழில் கம்பன் படைத்தது, ஹிந்தி மொழியில் துளசிதாசர் யாத்தது. இதில் வால்மீகி காட்டும் ராமன் உயர்குணங்கள் கொண்ட அரசகுமாரன், ஆனால் கம்பனும் துளசியும் காட்டும் ராமன் அவதார புருஷன். இந்த மூன்று நூல்களும் எங்கே எல்லாம் ஒத்துப் போகிறது, எங்கே எல்லாம் மாறுபடுகிறது என்பதை ஆசிரியர் மிக விவரமாகக் கூறி இருப்பார். பொதுவாக பல புத்தகங்களில் இல்லாத உத்தரகாண்டதையும் எழுதி இருப்பது இந்த நூலின் சிறப்பு.


தொழில், சுய முன்னேற்ற நூல்கள் 

3. Lee Iaccoca - An Autobiography - போர்ட் மோட்டார் கம்பனியின் முதல்மைச் செயல் நிர்வாகியாக இருந்தவரின் வாழ்க்கை வரலாறு. இத்தாலியைச் சேர்ந்த இவரை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் இரண்டாம் போர்ட் வேலையை விட்டு நீக்கி விடுகிறார். பின்னர் லீ அயகோகா நட்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கும் க்ரைசெலர் மோட்டார் நிறுவனைத்தை லாபத்தில் மாற்றிய வரலாறு.

4. Seven Habits of Highly Effective People -  ஸ்டீபன் கோவே என்பவர் எழுதிய புத்தகம். மற்ற பல சுய முன்னேற்ற நூல்கள் எல்லாம் மேற்கத்திய சிந்தனை மரபில் இருக்கும் போது, அதற்க்கு மாறாக கீழ்த்திசைச் சிந்தனையை முன்னெடுக்கும் நூல் இது. பிறரை மாற்ற முயற்சி செய்வதற்கு முன்னர் நம்மை மாற்றும் வழிகளை விவரிக்கும் நூல் இது.

5. Tough Time doesn't last long, tough people do - ராபர்ட் ஷுல்லர் என்ற கிருஸ்துவப் பாதிரியார் எழுதிய நூல் இது. தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்திக்கும் போது துவண்டு விடாமல் அதனை எதிர்கொள்வது பற்றியும், தோல்வியில் இருந்து வெற்றிக்கு முன்னேறும் வழியையும் கூறும் நூல் இது.

வரலாறு 

6. Glimpses of World History -  பதின்ம வயதில் இருக்கும் தன் மகள் இந்திரா பிரியதரிசினிக்கு சிறையில் இருந்து ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. அநேகமாக உலக வரலாற்றையும், கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில் இருந்த இந்தியாவையும் அறிந்து கொள்ள ஒரு சிறந்த நூல்.

7. சத்திய சோதனை - காந்திஜி அவர்களின் சுய சரிதை. அநேகமாக தான் உண்மை என்று நினைத்ததை, மறைக்காமல் சொன்ன மிகச் சில நூல்களில் இதுவும் ஓன்று.

8. May it please your honor - இதனை நூலாகக் கருத முடியுமா என்ற கேள்விக்கு என்னிடம் விடை இல்லை. காந்தி கொலை வழக்கில் நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம். மகாத்மா என்று கொண்டாடிய ஒரு மனிதனின் முன்னின்று கைத்துப்பாக்கியால் சுட வேண்டிய அவசியம் எது என்று கோட்சேயின் கூற்று.

தமிழ் மொழிப் படைப்புகள் 

9. சுஜாதாவின் படைப்புகள் - சுஜாதா படிப்பாளியா, இலக்கியவாதியா என்ற கேள்விக்குள் போகாமல், ஒரு காலகட்டத்தில் பல மக்களைப் படிக்க தூண்டியவர் என்ற நிலையிலும், பல்வேறு விசயங்கள் பற்றி ஒரு கோடு காட்டிப் படிக்கத் தூண்டியவர் என்ற முறையிலும் இந்தப் பரிந்துரை.

10. பாரதியார் கவிதைகள் - இவனுக்கு முன்னால் உள்ள தமிழ் இலக்கியங்கள் எல்லாம் இவனோடே முடிவடைந்து, இவனுக்குப் பின்னால் உள்ள தமிழ் இலக்கியங்கள் எல்லாம் இவனிடம்  ஆரம்பிக்கிறது என்ற பெருமை பெற்ற யுகசந்திக் கவிஞன். மொழியின் வீச்சைக் கற்க பாரதியை விடச் சிறந்த ஆசானை நான் படிக்கவில்லை இதுவரை.