சனி, 27 செப்டம்பர், 2014

கொஞ்சம் அரசியல் பேசலாமா ?

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா இன்று குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப் பட்டார். நான்கு வருட சிறைத் தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

இனி என்ன நடக்கலாம் ?

அறுதிப் பெரும்பான்மை இருப்பதால் இப்போது உள்ள சட்டமன்றம் கலைக்கப் படாது என்று நான் நம்புகிறேன். வழக்கம் போல ஒரு புது முதல்வரை ஜெ கைகாட்டி, அவரை அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்வார்கள். கொள்கை அளவில் இதே ஆட்சி நீடிக்கும்.

ஆனால், நான்கு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அதன் பிறகு ஆறு ஆண்டு தேர்தலில் நிற்கத் தடை என்றால், நேரடி அரசியலில் ஜெ அடுத்த பத்து வருடத்தில் ஈடுபட முடியாது. அரசியலில் பத்து ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். அத்தனை வருடம் கட்சியைத் தன் கட்டுப்பாடில் அவர் வைத்து இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை. இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லாத கட்சி காலப்போக்கில் காணமல் போகவே வாய்ப்பு இருக்கிறது.

நிச்சயமாக இந்தத் தீர்ப்பு திமுகவிற்கு ஒரு பெரும் வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது. தமிழகம் எங்கும் கிளை இயக்கங்கள், களத்திலும் இணையத்திலும் தீவிரமாக இயங்கக்கூடிய கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் சர்வ நிச்சயமான ஒரு வாக்கு வங்கி என இன்றைய நிலை திமுகவிற்கு சாதகமாகவே இருக்கிறது.

ஆனால், பல திமுக மாவட்டச் செயலாளர்கள், மற்றும் மந்திரிகள் மீது மக்களுக்கு உள்ள கோபம், தலைமையின் குடும்ப வாரிசு அரசியல், அதன் வழி பற்றி மாவட்டங்களில் உள்ள வாரிசு அரசியல் என்று நம்பிக்கை இழந்த ஒரு பெருங்கூட்டம் திமுகவிற்கு பாதகமாகவே இருக்கறது.

2G அலைக்கற்றை வழக்கும், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மீது உள்ள வழக்குகளும் வேகம் பெற்று, ஒரு வேளை அந்தத் தீர்ப்புகள் திமுகவிற்கு பாதகமாக வந்தால், ஊழலைப் பற்றிய திமுகவின் பிரச்சாரம் மக்கள் மனதைக் கவருவது சங்கடமே.

2016 தேர்தலில் யார் முதல்வர் கலைங்கரா இல்லை ஸ்டாலினா என்ற விவாதம் தேர்தலில் எதிரொலிக்கும் என நான் நினைக்கிறேன்.

அதிமுகவின் வாக்கு வங்கி என்பது பெரும்பான்மையாக திமுகவின் எதிர்ப்பாளர்களால் கட்டமைக்கப் பட்டது. அதனை யார் கைப்பற்றுவார்கள் என்பது தான் இன்று பல கட்சிகளுக்கு முன் உள்ள கேள்வியாக இருக்கும். எம் ஜி யாரால் கட்டமைக்கப் பட்ட அந்த வாக்கு  எங்கே செல்லும், யார் அதனை அடைவார்கள் என்பதே இன்று பலர் முன் உள்ள வினா

காங்கிரஸ், பா ஜ க, கம்யூனிஸ்ட் என்ற தேசியக் கட்சிகள் இங்கே பயன் அடையப் போகிறார்களா இல்லை மதிமுக, பாமக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள என்று தமிழ்நாட்டில் சில இடங்களில் மட்டும் ஊடுருவி உள்ள கட்சிகள் வளர்ச்சி காணுமா என்பதை வருங்காலம் காட்டும்.

எது எப்படி இருந்தாலும், தமிழக அரசியல் களம் மிகப் பெரிய மாற்றத்தின் முன்னே இருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை