வியாழன், 22 ஜனவரி, 2015

குறிப்புகளின் குறிப்புகள்

ஒருபுறம் பலகோடி ரூபாய்கள் புரளும் போட்டியும் சவாலும் நிறைந்த துறையில் மிக முக்கியப் பதவி, மறுபுறம் குடும்பத்தோடு போதிய நேரம் அளிக்கும் பொறுப்பான குடும்பத்தலைவன். மீதி இருக்கும் நேரத்தில் கடினமான பல விசயங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் ஒரு தீவிரமான பதிவர். இப்படிப் பல அவதாரம் எடுக்கும் நண்பர் ஜோதிஜியின் அடுத்த படைப்பு ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் என்ற மின்னூல்.

ஜோதிஜி பொழுதுபோக்காக எழுதுவது இல்லை, அப்படிப் படிப்பவர்களுக்காக அவர் எழுதுவதும் இல்லை. அவர் எழுதுவது எல்லாம் மிகுந்த ஆராய்ச்சியும், கடுமையான உழைப்பையும் கேட்கின்ற களங்கள்.

அவருக்கு மிகவும் பழக்கப்பட்ட களம்தான் - திருப்பூரும், ஆயத்த ஆடைகள் சார்ந்த உலகமும். டாலர் நகரத்தின் தொடர்ச்சி என்றே இந்த நூலை எடுத்துக் கொள்ளலாம். குடிசைத் தொழில் போல ஆரம்பித்து, இன்று பல்லாயிரம் கோடி புழங்கும் அளவிற்கு வளந்த தொழில், அதோடு வளர்ந்த நகரம், பணப் பரிமாற்றம் நடக்கும் போது மாறும் மனித மனம், அதில் நடக்கும் நாடகங்கள் என்ற பலவிதப் பரிணாமங்களைக் காட்டிச் செல்கிறார் ஜோதிஜி.

அளவுக்கு மீறிய பணம் புழங்கும்போது, ஏற்படும் கலாசார அதிர்வுகள், வாழ்க்கைமுறையின் மாற்றங்கள், அதனால் ஏற்படும் உறவுச் சிக்கல்கள் இவை எல்லா இடத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான பாதிப்பு. வளரும் பருவத்தில் சரியான முறையில் வளர்க்கப்படுபவர்கள் இந்தச் சிக்கல்களை எளிதாக எதிர்கொண்டு வென்று விடுகின்றனர். ஆனால் பலர் இந்தச் சூழலில் சிக்கி வரைமுறை இல்லாது மாட்டி சீரழிந்து சின்னாப்பின்னம் ஆகிவிடுகின்றனர்.

எத்தனை எத்தனை மனிதர்கள், அதில் அவர்கள் காட்டும் முகங்கள் - எல்லாப் பெருமையையும் தனக்கென ஆக்கி, எல்லாத் தோல்விக்கும் அடுத்தவர்களைப் பலிஆடாக்கும் மனிதர்கள், கிடைக்கும் இடத்தில எல்லாம் வழிமுறை பற்றிய சிந்தனையே இல்லாது பணத்தை மட்டுமே துரத்தும் ஆட்கள், எப்போதோ அடைந்த வெற்றியின் வரலாற்றில் வாழும் மனிதர்கள் - அநேகமாக நாம் தினம் தினம் காணும் மனிதர்கள் தான். இவர்களை ஆவணப் படுத்தும் முயற்சியில் வெற்றி அடைந்து இருக்கிறார் நூலாசிரியர்.

நான் அறிந்து தொழில் சாம்ராஜ்யங்களின் வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது. வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் வரலாறும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு தொழில்நகரின் வரலாறு என்று பார்த்தால் அநேகமாக அதன் முதல்ப்பெயராக ஜோதிஜியின் பெயர்தான் இருக்கும் போல.

வாழ்த்துகள் ஜோதிஜி 

சனி, 10 ஜனவரி, 2015

வெற்றிக்கான நூறு விதிகள்



புகழ்பெற்ற தனிமனித மேம்பாட்டு பயிற்சியாளரான  ப்ரைன் டிரஸி எழுதியது இந்தப் புத்தகம். வெற்றி அடைவதற்கான நிச்சயமான நூறு மாற்றவியலாதா விதிகளைப் பற்றி இந்தப் புத்தகம் பேசுகிறது. மிக முக்கியமாக ஆசிரியர், படிக்கவும் புரிந்து கொள்ளவும் கடினமான சொற்களையோ அல்லது வாக்கியங்களையோ இந்த நூலில் பயன் படுத்தவில்லை.

புரிந்து கொள்ள எளிதாக இந்த விதிகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

                          1. வாழ்க்கைக்கான விதிகள் 
                          2. வெற்றிக்கான விதிகள் 
                          3. வணிகத்திற்கான விதிகள் 
                          4. தலைமைப்பண்புக்கான விதிகள் 
                          5. பொருளாதார விதிகள் 
                          6. விற்ப்பனைக்கான விதிகள் 
                          7. பேரம் பேசுவதற்கான விதிகள் 
 8. நேர மேலாண்மைக்கான விதிகள் 

மனிதன் என்பவன் சிந்தனைகளின் தொகுப்பு. அதனால் சிந்தனைகளைச் சீர் செய்வதன் மூலம், மனிதன் தன வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்பதே ஆசிரியர் மீண்டும் மீண்டும் இந்தப் புத்தகத்தில் சொல்லும் கருத்து. எந்த நிகழ்ச்சியும் தற்செயலாக நடப்பதில்லை. எல்லா நிகழ்ச்சிக்குப் பின்னும் எதோ ஒரு காரணம் இருக்கிறது, அநேகமாக அது நமது செயலாகவே இருக்கிறது என்பதே இந்தப் புத்தகத்தின் அடிநாதம்.

உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும் மாணவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துப் புரிந்து கொண்டால் தங்கள் வாழ்கையில் அனுபவத்தின் மூலம் கற்றுக் கொள்ளும் பாடங்களை காலவிரயம் இல்லாமலே கற்றுக் கொண்டு முன்னேறிவிடலாம். 

வெள்ளி, 2 ஜனவரி, 2015

5. பழங்கால நாகரீகம்

நைனிடால் சிறையில் இருந்து ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களின் மொழிபெயர்ப்பு 
---------------------------------------------------------------------------------------------------------------------------------

1931 ஜனவரி 9

வாரம் இருமுறை உலகச் செய்திகளைச் சுமந்துவரும் பாரத் என்ற ஹிந்தி இதழில் உன் தாயாரின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்றும் அதலால் அரசாங்கம் அவளை மலாக்கா சிறையில் இருந்து லக்னோ சிறைக்கு மாற்ற உத்தரவிட்டிருக்கிறது என்றும் படித்தேன். ஒரு வேளை இந்தச் செய்தி வதந்தியாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்தச் சந்தேகம் கூட மன அமைதியைக் குலைக்கிறது. தனிப்பட்ட முறையில் நம்மால் துயரங்களைத் தாங்கிக் கொள்ள முடிகிறது. ஆனால் நமக்கு நெருக்கமானவர்களுக்கு ஏற்படும் துயரங்கள், அதிலும் அவர்களுக்கு நம்மால் எந்த உதவியும் செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கும் போது நம்மைத் தாங்கவொண்ணா துயரில் தள்ளி விடுகிறது.

அதனால்தான் அந்தச் செய்தி உன் தாயாரைப் பற்றிய கவலையை உண்டாக்கி விட்டது. உன் தாயார் சிங்கம் போன்ற மன உறுதி கொண்டவள்தான். அவள் தைரியசாலி ஆனால் உடலளவில் பலவீனமானவள், மெலிந்தவள். இன்னும் அவள் நலிவடைவதை நான் விரும்பவில்லை. உள்ளம் உறுதியாக இருந்தாலும் உடல் வலிமையாக இல்லாவிட்டால் என்ன பயன் ? எந்த ஒரு செயலையும் சிறப்பாகச் செய்து முடிக்க நமக்கு உடல் ஆரோக்கியம் மிக அவசியமான ஓன்று.

அவள் லக்னோ சிறைக்கு மாற்றப்படுவதும் ஒருவிதத்தில் நல்லதுதான். மலாக்காவில் அவள் தனியாக இருந்தால். லக்னோ சிறையில் அவளது தோழியர்கள் இருப்பதால் அவள் சற்றே மகிழ்ச்சியாக இருக்கக்கூடும். எனக்கும் அவள் அருகிலேயே இருப்பாள். இங்கே இருந்து லக்னோ வெறும் ஐந்து மைல் தொலைவுதான். இது ஒரு பொருளற்ற சிந்தனைதான். ஐந்து மைலோ நூற்றைம்பது மைலோ, இரு சிறைக்களின் உயர்ந்த மதில்சுவர்களை எண்ணிப் பார்த்தால் இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

தாத்தா (மோதிலால் நேரு) இன்று அலகாபாத் திரும்பிவிட்டார் என்பதையும் அவர் இப்போது உடல்நிலை தேறி ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதையும் அறிந்தேன். அவர் மலாக்கா சிறையில் உனது தாயாரைக் கண்டு வந்தார் என்பதை அறிந்த உடன் மகிழ்ச்சி அடைந்தேன். கொஞ்சம் நல்லூழ் இருந்தால், உங்கள் அனைவரையும் நாளை நான் சந்திக்க முடியும். நாளை சிறையில் பார்வையாளர் நாள். சிறையில் இருப்பவர்களுக்கு அது ஒரு கொண்டாட்ட தினம். நான் உன் தாத்தாவை ஏறத்தாழ இரண்டு மாதங்களாகப் பார்க்கவில்லை. அவரை நேரில் சந்தித்து, அவர் உடல் நிலையைப் பற்றி அறிந்து கொண்டால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். உன்னையும் நீண்ட இருவாரங்களுக்குப் பின் நான் பார்க்கலாம். உன்னைப் பற்றியும், உன் தாயாரைப் பற்றியும் என்னிடம் சொல்ல உனக்கும் பல செய்திகள் இருக்கும் அல்லவா !

ஆஹா ! உனக்கு வரலாற்றை எழுத ஆரம்பித்து, வேறு எதையெல்லாமோ எழுதிக் கொண்டு இருக்கிறேன். நான் நிகழ்காலத்தை சற்றே மறந்து விட்டு, ஒரு மூவாயிரம் வருடத்திற்கு பின்னே செல்வோம்.

என் முந்தய கடிதங்களில் எகிப்து மற்றும் க்ரெட நகரத்தில் உள்ள  க்நோசஸ்  பற்றி உனக்கு சொல்லி இருந்தேன். மனித நாகரீகம் இந்த இரண்டு இடங்களிலும், இன்று ஈராக் என்று அழைக்கப்படும் மெசபடோமியாவிலும், சைனா, இந்தியா மற்றும் கிரேக்க நாட்டிலும் தான் ஆரம்பமானது. கால அளவில் கிரேக்கம் சற்றே இளைய நாகரீகம். இந்த நாகரீகங்கள்  இப்போது என்ன   நிலையில் இருக்கிறது ? கநோச்ஸ் நாகரீகம் இப்போது இல்லவே இல்லை. கிரேக்கம் அதனை அழித்துவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டு செழித்து வளர்ந்த எகிப்திய நாகரீகம் இன்று பிரமிடு, பதப்படுத்தப் பட்ட சடலங்கள் மற்றும் அழிவுற்ற கோவில்களாக மட்டுமே எஞ்சிஉள்ளது. அங்கே நைல் நதி இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது, மக்கள் வசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களது பழங்கால நாகரீகத்தில் இருந்து முழுதாக வேறுபட்டுத்தான் இருக்கிறார்கள்.

இராக்கிலும் பெர்சியாவிலும் எத்தனையோ பேரரசுகள் தோன்றி மறைத்து போயின. மகத்தான பாபிலோன் நகரைப் பற்றிய குறிப்புகள் பழைய ஏற்பாடில் விரவி இருக்கிறது. இந்தப் பழைய நகரில் எத்தனையோ அரசுகள் தோன்றி மறைந்து இருக்கிறது. மன்னர்களும் சக்கரவர்த்திகளும் குறைந்த கால அளவில் ஆட்சி செய்து உலகை விட்டு விலகிச் சென்று உள்ளார்கள். ஆனால் மனித நாகரீகம் இன்றும் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அரேபிய இரவு கதைகளின் களமான பாக்தாத் நகரம் இன்றும் துடிப்போடு இருக்கிறது. ஆனால் பெர்சியாவிலும், இராக்கிலும் இன்று உள்ள மக்கள் தங்கள் பழைய நாகரீகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

இன்றும் மக்கள் வியப்போடு கற்கும் வரலாறு கிரேக்க வரலாறு. கிரேக்த்தின் இலக்கியமும் பளிங்குச் சிலைகளும் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இன்றைய ஐரோப்பா புகழ்மிக்க அந்தப் பழைய கிரேக்கத்தின் குழந்தை. ஆனால் இன்றுள்ள கிரேக்கம் ஐரோப்பாவின் தென்கிழக்கில் உள்ள ஒரு சிறிய நாடு மட்டுமே.

எகிப்து, கிரேக்கம், ஈராக், பெர்சியா - இந்த எல்லாப் பழைய நாகரீகங்களும் இன்று வரலாற்றின் பக்கங்களாகவே குறிக்கப்படுகிறது. இவைகளோடு சமமாகக் குறிக்கப்படும் மற்றைய இரண்டு நாகரீகங்கள் - சைனா மற்றும் இந்தியாவின் நிலை இன்று என்ன ? இங்கும் பேரரசுகள் தோன்றின, மறைந்தன. பெரும் படையெடுப்புகளும், கொள்ளைகளும், பெரிய அளவிலான அழிவும் நடந்தன.

ஆனால் மற்றைய நாடுகள்போல் இல்லாமல், இந்த இரு நாடுகளில் மட்டும் இன்னும் அந்தப் பழைய நாகரீகம் அறுபடாமல் தொடர்ச்சியாக வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த இரண்டு நாடுகளும் தங்கள் தொட்ட உயரத்தில்  இருந்து விழுந்து விட்டன. கால ஓட்டத்தில் கசடுகளும், அழுக்குகளும் அதில் மண்டியுள்ளது. ஆனால் அதனைத் தாண்டியும் அவை உயிர்த்துடிப்போடு விளங்குகின்றன. இன்றைய இந்திய மக்களின் வாழ்க்கைமுறை என்பது அந்தப் பழைய நாகரீகத்தின் தொடர்ச்சிதான்.

உலகம் இன்று எவ்வளவோ மாறிஇருக்கிறது. புகைவண்டிகளும், பெரும்கப்பல்களும், தொழிற்சாலைகளும் இன்று உலகத்தின் பார்வையையும், போக்கையும் முற்றிலுமாக மாற்றியுள்ளது. இந்தியாவின் போக்கையும் இந்த மாற்றங்கள் பாதிக்கவே செய்துகொண்டு உள்ளது. ஆனால் வரலாற்றின் கால ஓட்டத்தையும் தாண்டி, இன்றும் தொடர்ந்துவரும் இந்திய நாகரீகம் அனைவரையும் வியப்பிலாழ்த்தும் ஒரு அதிசயம்தான். நாம் புகழ் வாய்ந்த அந்த நாகரீகத்தின் வாரிசுகள். வடமேற்குக் கணவாய் வழியாக ஹிந்துஸ்தானம் என்றும் ஆரியவர்தனம் என்றும் பரதகண்டம் என்றும் இன்று குறிக்கப்படும்  இந்தப் பரந்த நிலப்பரப்பிற்கு வந்த அந்த மக்களின் நேரடி வாரிசு நாம். கடினமான மலைதொடர்களைத் தாண்டி முன்பின் தெரியாத அந்த நிலத்திற்கு அவர்கள் வருவதை உன்னால் காண முடிகிறதா?

எது வரும் என்ற அச்சம் இல்லாமல் மிகுந்த துணிச்சலோடும், சாகச உணர்வோடும் அவர்கள் முன்னேறிச் சென்றனர். இறப்பையும் அவர்கள் புன்முறுவலோடு எதிர்கொண்டனர். அவர்கள் வாழ்க்கையைக் காதலித்தனர். வாழும் வழி என்பது வாழ்க்கையை, அதன் சவால்களை எதிர்கொள்வது மட்டும்தான் என்று அவர்கள் உணர்ந்து இருந்தனர். அவர்களைத் தோல்வியோ பின்னடைவுகளோ கலங்க வைக்கவில்லை. நம்முடைய அந்த முகம் தெரியாத முதாதையர்கள் புகழ்வாய்ந்த கங்கை நதிக்கரையை அடைந்தனர். கங்கையின் பிரவாகம் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கும். அவர்கள் கங்கையை வணங்கி தங்கள் இனிமையான மொழியில் அந்த நதியைப் போற்றிப் பாட ஆரம்பித்தனர்.

அவர்களின் வாரீசு நாம் என்பதை என்னும் போது நாம் பெருமிதம் அடைகிறோம். ஆனால் கால ஓட்டத்தின் நன்மைக்கும், தீமைக்கும் நாம் பொறுப்பெடுக்க வேண்டும். இன்றைய இந்தியாவில் தவறுகள் பல உள்ளன. உலகநாடுகள் பலவற்றின் கீழே நம்மைத் தள்ளிய தவறுகள் உள்ளன. வறுமையின் கோரத் தாண்டவமும், அன்னியர் கைகளில் பகடைக்காய் என்று நாம் இன்று உருண்டுகொண்டு இருக்கிறோம்.

ஆனால் இந்த இழிநிலை இன்னும் நீடிக்கக்கூடாது என்ற நினைப்பும் உறுதியும் இன்று நம்மிடையே உள்ளது.