புதன், 25 மார்ச், 2015

நினைவில் வைக்க

பொருள் சம்பாதிப்பது தவறு என்றோ இல்லை பணத்தைச் சேமிப்பது தவறு என்றோ நான் நினைக்கவில்லை.

செய்க பொருளைச் செறுநர் செருக்கு அழிக்கும்
எக்கு அதன் கூரியது இல் ( 759)

மிகத் தெளிவாக வள்ளுவர் செய்க பொருளை என்று அறைகூவல் விடுக்கிறார். ஆனால் அந்தப் பொருள் என்பது சரியான வழியில் சம்பாதித்த வருமானமாக இருக்கவேண்டும்.

அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள் ( 754)

சட்டப்படி சரி என்பதற்கும் அறநெறிக்கு உட்பட்டு என்பதற்கும் மிகச் சிறிய இடைவெளி உண்டு. ஆகவே சட்டப்படி மட்டுமல்லாது தர்மப்படியும் சரியான முறைப்படியே செல்வத்தை உருவாக்கவேண்டும்.

செல்வதைச் சேர்ப்பதற்கான வழிமுறையை அறிவதும், சரியான வழியில் அந்தப் பொருளை ஈட்டுவதும், ஈட்டிய பொருளைக் காப்பதும், அதனைப் பெருக்குவதும் அப்படிச் சேர்த்த பொருளை நல்ல வழியில் செலவு செய்வதும் அரசுக்கு மட்டும் இல்லை, தனிமனிதனுக்கும் ஏற்புடையதுதான்.

இதுவரை நாம் தனிமனிதனின் பொருளாதாரக் குறிக்கோளை நிறைவேற்ற சரியான அளவில் ஆயுள் காப்பீடு செய்ய வேண்டியதின் அவசியம் பற்றியும், மனித உயிரின் மதிப்பை எப்படி நிர்ணயம் செய்வது என்பது பற்றியும், மருத்தவக் காப்பீடு செய்வதன் தேவைகளைப் பற்றியும் பார்த்தோம்.

மற்ற எந்த பொருளையோ அல்லது சேவையையோ ஒரு வாடிக்கையாளராக நாம் வாங்குவதற்கும், காப்பீட்டை வாங்குவதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. இந்த இரண்டு விற்பனைகளும் 1872 ஆம் வருடத்திய இந்திய ஒப்பந்தச் சட்டத்தின்படியே நடந்தாலும் ( Indian Contract Act 1872 )  மற்றையப் பரிமாற்றங்கள் எல்லாம் CAVEAT EMPTOR  ( buyer's beware ) அதாவது வாங்குபவர்களின் கவனம் அவசியம் என்ற முறையில் செயல்படுகின்றது. தனக்குத் தேவையான பொருளை அல்லது சேவையை வாங்கும் வாடிக்கையாளர்,  பொருள்களின் சிறப்பை, அதற்க்கான விலையை மற்றும் இதர விசயங்களை சந்தையில் கிடைக்கும் அதே போன்ற பொருளோடு அல்லது சேவையோடு ஒப்பிடு முடிவு எடுத்துக்கொள்ளட்டும் என்ற முறையில் இயங்குகிறது. 

ஆனால் காப்பீடு துறையோ UBERRIMA FIDES  ( at most good faith ) என்ற முறையில் இயங்குகிறது. காப்பீடுத் துறையில் வாடிக்கையாளர் தெரிவிக்கும் தகவல்கள் உண்மையாகவே இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் காப்பீடு நிறுவனங்கள் காப்பீடை வழங்குகின்றன. எனவே காப்பீடு நிறுவனங்கள் கேட்கும் தகவல்களை முழுமையாக, உண்மையாகத் தரவேண்டிய பொறுப்பு வாடிக்கையாளர்கள் வசமே இருக்கிறது. 

பொதுவாக, காப்பீடு செய்து கொள்ளுபவர் தங்கள் உடல் நிலை பற்றிய முழுமையான தகவல்களையும், புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற தகவல்களையும் எந்தவித ஒளிவுமறைவு இல்லாமல், காப்பீடு நிறுவனத்திற்க்கு அளிக்க வேண்டும். இந்தத் தகவல்களைக் கொண்டே, நிறுவனங்கள் காப்பீடுக்கான தொகையை நிர்ணயம் செய்யும். 

ஆக, நேர்மையான முறையில் பொருளீட்டி, சரியான தகவல்களைக் கொடுத்து, எந்த உண்மைகளையும் மறைக்காமல் காப்பீடு செய்துகொள்ளுங்கள்.

உங்கள் பார்வைக்கு :

1. முப்பத்தி ஐந்து வயதான ஆணுக்கு ரூ ஐந்து லட்சம் அளவிலான ஆயுள் காப்பீடு (Endowment Plan)  முப்பது வருடத்திற்கான வருடாந்திரப் பிரிமியம் : Rs 16,100

2. முப்பத்தி ஐந்து வயதான ஆணுக்கு முப்பது வருடத்திற்கான  ஒரு கோடி ரூபாய்க்கான இறப்பு மட்டுக்குமான ( Term Insurance ) காப்பீடுக்கான வருடாந்திரப் பிரிமியம் : Rs 33,600

3. முப்பத்தி ஐந்து வயதான ஆண் மகனைத் தலைவனாகக் கொண்ட குடும்பத்திற்கு ( மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளோடு) ஐந்து லட்ச ரூபாய்க்கான    Floater முறையிலான மருத்துவக் காப்பீடுக்கான  வருடாந்திரப்  பிரிமியம் : Rs 10,600/-

மேற்குறிப்பிட்ட பிரிமியம் தொகைகள் சேவை வரி சேர்க்காமல்.
இவை இந்திய ஆயுள் காப்பீடுக் கழகம் ( Life Insurance Corporation of India ), ஸ்டார் இன்சூரன்ஸ் கம்பனியின் பிரிமியம் தொகை. 

தொடர்புடைய பதிவுகள்.

2 கருத்துகள்:

  1. ஆச்சரியமாக இருக்கு? எப்படியோ தொடர்ந்து எழுதுறீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையைச் சொன்னால் எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது )))

      நீக்கு