புதன், 18 மார்ச், 2015

ஒரு கோடி ரூபாய்க் கனவு


எவ்வளவு பணம் கையில் இருந்தால் நீங்கள் பாதுகாப்பாக உணருவீர்கள் என்று கேட்டால், அநேகமாக ஒரு கோடி ரூபாய் என்ற பதில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக இருக்கும். 




அப்படி அந்த ஒரு கோடி ரூபாயை எப்படி சேமிப்பது என்பதைப் பற்றிய எனது கருத்துக்களை இங்கே பதியலாம் என்று நினைக்கிறேன். 

உலகின் மிகப் பெரும் உண்மைகள் எல்லாம் எப்போதும் மிக எளிமையாகவே இருக்கிறது, நாம்தான் அதனை மிகக் கடுமையாக முயன்று கடினமாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். சிறுவயதில் நாம் அனைவரும் படித்த ஓன்று தான் "சிறுதுளி பெருவெள்ளம்" என்று,  அப்படி சிறுகச் சேமித்து  சரியாக முதலீடு செய்வதைப் பற்றிதான் நாம் இதில் பேசப் போகிறோம். 

மிக நிச்சயமாக பணம் சம்பாதிப்பதைப் பற்றி இதில் எதையும் நாம் பேசப் போவது இல்லை. அதிலும் லாட்டரி அடிப்பதையோ இல்லை முறையற்ற, சட்டத்திற்கு புறம்பான, தார்மீக வழிக்கு மீறிய வழியைப் பற்றி நாம் இதில் பேசப் போவது இல்லை. மல்டி லெவல் மார்கெட்டிங், நிலத்தை வாங்கி விற்பது, அல்லது பகுதி நேர வேலை என்ற எத்தனைப் பற்றியும் நாம் இதில் பேசப்போவது இல்லவே இல்லை.

முறையான வழியில் சம்பாத்தித்து, அதில் குறையில்லாமல் வசதியாக வாழ்ந்து, சம்பாதிக்கும் பணத்தை சரியாக சேமிப்பது பற்றி, அந்தச் சேமிப்பை முதலீடு செய்வதைப் பற்றி, அந்த முதலீடு செய்வதில் கவனம் கொள்ள வேண்டிய விசயங்களைப் பற்றியே இதில் பேசப் போகிறோம்.

பணம் ஒன்றே எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ளும் போது, பணம் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்பதையும் நான் ஒத்துக் கொள்கிறேன். தேவையான அளவிற்கு உலகில் பொருள்களும் வாய்ப்புகளும் நிறைந்து இருக்கிறது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

நினைவில் கொள்க : இதில் எழுத இருக்கும் விஷயங்கள் எல்லாம் எல்லோருக்கும் பொருந்தி வரும் என்று ஆகாது. உங்கள் கனவுகள், உங்கள் தேவைகள், உங்கள் முதலீட்டின் மேல் நீங்கள் எதிர்நோக்கும் வட்டி அல்லது வருமானம், அதற்காக நீங்கள் சந்திக்கத் தயாராக இருக்கும் இடர்கள் (ரிஸ்க்) என்பது எல்லோருக்கும் ஓன்று போலவே இருக்காது. இங்கே ஒரே அளவு அனைவருக்கும் பொருந்தாது. எனவே இந்தத் தொடரை ஒரு ஆரம்பநிலை வழியாட்டியாக மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.