சனி, 11 ஜூலை, 2015

பரஸ்பர நிதி - ஒரு அறிமுகம்

சேமிப்பு என்பதும் முதலீடு என்பதும் பல நேரங்களில் ஒரே பொருளைத் தரும்படி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உண்மையில் அவை இரண்டும் வேறு வேறானவை.

சேமிப்பு என்பது குறுகியகால அளவில் பயன்படுத்தும் வகையில் இருப்பது. அடுத்தவருடம் போக நினைக்கும் சுற்றுலாவிற்க்கோ, அல்லது இன்னும் பத்து மாதத்தில் வரும் பண்டிகைக்கால செலவுகளுக்கோ என்று அறுதியிட்டு அதற்காக சேமிப்பது. அநேகமாக, உடனடியாக பணமாக மாற்றும் அளவில் வங்கியில் அல்லது சீட்டு நிறுவனங்களில் பாதுகாக்கப் படுவது. மாதாந்திர நகை சேமிப்புத் திட்டங்கள் இதற்க்கான ஒரு உதாரணம். இது போன்ற சேமிப்பில் நமது பணத்தை இழக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும், அல்லது இல்லாமலே இருக்கும். சேமிக்கும் பணத்திற்கு நமக்குக் கிடைப்பது வட்டி வருமானம் மட்டுமே.

ஆனால் முதலீடு என்பது பொதுவாக நீண்டகால கனவுகளை நிறைவேற்றப் பயன்படுத்தப்படும். குழந்தைகளின் படிப்பு, அவர்களுக்கான திருமணம், ஓய்வு காலத்தில் பயன்படுத்த இப்படி முதலீட்டுக்கான கால அளவு எப்போதும் அதிகமாகவே இருக்கும். முதலீட்டை உடனடியாகப் பணமாக மாற்றுவது கொஞ்சம் கடினமான செயல். முதலீட்டில் நமது பணத்தை இழக்கும் வாய்ப்பு சற்றே அதிகம். முதலீட்டின் மதிப்பு கூடுவதே நாம் அடைகின்ற பயனாக இருக்கும். அந்த மதிப்பு எந்த அளவில் கூடும் என்பதைக் கணிப்பது கொஞ்சம் கடினமான ஓன்று.

முதலீடு செய்வது என்பது சூதாடுவது அல்ல என்பதை நாம்  புரிந்து கொள்ள வேண்டும். சூதாடுவது என்பது என்ன நிகழும் என்பதைக் கணிக்க முடியாத நிலையில் நமது பணத்தை அதில் ஈடுபடுத்துதல். ஆனால் முதலீடு என்பது போதுமான அளவு தகவல்களுடன், என்ன நடக்கும் என்பதைக் கணித்து அதன் பின் அதில் பணம் முதலீடு செய்தல்.

இந்த உலகில் எப்படி எல்லா மனிதர்களுக்கும் வெவ்வேறு குணங்களும், சிந்தனைகளும் இருக்கிறதோ அதுபோலவே அவர்களுக்கு வெவ்வேறு அளவிலான சவால்களைச் சந்திக்கும் மனப்பாங்கும் இருக்கும். அவர்களின் முதலீடுக்கான காரணங்களும் ( INVESTMENT OBJECTIVES), அந்தக் காரணங்களை அடைய அவர்கள் வசம் இருக்கும் கால அளவும் வெவ்வேறாகவே இருக்கும்.

எனவே, ஒரே வழியான முதலீட்டு ஆலோசனைகள் என்பது அல்லது எல்லோருக்கும் பொருந்தி வரக்கூடிய ஆலோசனைகள் என்றோ ஓன்று கிடையாது. உங்கள் கனவுகள், நீங்கள் முதலீடு செய்ய நினைக்கும் காரணங்கள், அந்தக் கனவை நினைவாக்க உங்கள் வசம் இருக்கும் கால அளவு இவைகளை வைத்து உங்களுக்கான முதலீட்டு வழியை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். வல்லுனர்களின் அறிவுரை என்பது உங்களுக்கான கைகாட்டி மரமாக  இருக்கலாமே அன்றி அவைகளே முழுவதும் உங்கள் பாதையாக இருக்கும் வாய்ப்பு மிகக் குறைவே ஆகும்.

எப்படி உங்கள் உடல்நலத்திற்கான ஆலோசனைகளை ஒரு மருத்துவர் அளிக்கிறாரோ அதுபோல உங்கள் முதலீட்டுக்கான ஆலோசனைகளுக்கு, அதற்கான தேர்ச்சி பெற்ற ஆலோசகர்களும் இருக்கிறார்கள்.

சேமிப்பு என்பதும் முதலீடு என்பது வேறு வேறு என்பதை நீங்கள் புரிந்துகொண்டு இருப்பீர்கள். முதலீடு என்பது பணத்தைப் பெருக்குவதும், நம்மிடம் உள்ள பணத்தை நமக்காக வேலை பார்க்க வைப்பதும் ஆகும்.இன்றைய நிலையில் நீண்ட கால அளவில் லாபகரமான முதலீடு என்பது பங்குச்சந்தையில் முதலீடு செய்வதே ஆகும்.

ஆனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் பலர் தயாராக இருப்பது இல்லை. ஏன் என்றால்
1. பணத்தை இழக்கும் வாய்ப்பு பற்றிய நமது  அச்சம்
2.  இழப்பின் வாய்ப்பைக் குறைக்கும் அளவிற்கு பல நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் அளவிற்கு பலரிடம் பணம் இருப்பது இல்லை.
3.  பங்குகளின் விலைகளைத் தினப்படி பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.
4. சந்தையின் போக்கை  கணிக்கும் துறைசார்ந்த திறமை இல்லை.

ஆனால் என்னால் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு முதலீடு செய்ய முடியும், அதையும் நான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறேன், இந்த நிலையில் நான் என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்கிறீர்களா ? உங்களுக்காக உள்ளதுதான் பரஸ்பர நிதிகள் (Mutual Funds) 

உதாரணமாக உங்களிடம் ஒரு லட்ச ரூபாய் இருக்கிறது. இதை நீங்கள் சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்க நினைக்கிறீர்கள். இதுபோல இன்னும் பலரிடம் பணம் இருக்கிறது. நூறு தனிநபர்களிடம் மொத்தமாக ஒரு கோடி ரூபாய் இருக்கிறது, அனைவரும் சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். ஆனால் அனைவருக்கும் மேலே குறிப்பிட்டது போன்ற சந்தேகங்களும் பயங்களும் இருக்கிறது. என்ன செய்யலாம் ? பங்குச் சந்தையில் விற்பனர் ஒருவருக்குச் சம்பளம் கொடுத்து உங்கள் அனைவரின் பணத்தையும் அவரைக் கொண்டு நிர்வாகம் செய்யச் சொல்லலாமா? எப்படிப் பட்ட பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்று நீங்கள் அனைவரும் சேர்ந்து எடுக்கும் முடிவின்படி, அதாவது உங்கள் விருப்பப்படி / ஆணைப்படி அவரை முதலீடு செய்யச் சொலலாமா ? நிர்வாகிக்கு குறிப்பிட்ட சம்பளம் மட்டுமே, லாபமோ அல்லது நட்டமோ அது உங்கள் அனைவருக்கும் என்று முடிவு செய்துகொள்ளலாமா ? இதைத்தான் பரஸ்பரநிதி நிறுவனங்கள் செய்து வருகின்றன.

ஆனால் பல்வேறு மக்களைக் கூட்டி அவர்கள் எப்படி முதலீடு செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று கேட்டு அறியமுடியாது அதனால், பரஸ்பரநிதி நிறுவனங்கள் தாங்கள் எப்படி முதலீடு செய்யப் போகிறோம் என்பதைத் தெரிவித்து, அந்த முதலீட்டிற்குத் தயாராக உள்ள தனியாரிடம் இருந்து நிதியைத் திரட்டி, தாங்கள் கூறியது போன்று முதலீடு செய்து அதன் லாப நட்டத்தை முதலீட்டலர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த சேவைக்காக முதலீட்டாளர்கள் இடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் கட்டணமாகப் பெற்றுக் கொள்கின்றனர்.

எப்படி உங்களுக்கான வீடு கட்டும் பொறுப்பை ஒரு பொறியாளர் கட்டணம் பெற்றுக்கொண்டு செய்கிறாரோ, எப்படி உங்களுக்கான வழக்கை ஒரு வழக்கறிஞர் நடத்துகிறாரோ அது போல உங்களுக்காக முதலீடு செய்பவர்கள் இருக்கும் ஒரு நிறுவனம்தான் பரஸ்பர நிதி நிறுவனங்கள்.

 ஒவ்வொரு முதலீட்டுத் திட்டமும் வெவ்வேறு குறிக்கோளைக் கொண்டு இருக்கும். அந்தக் குறிக்கோளை அடைய வெவ்வேறு முதலீடுகளைச் செய்ய முடிவு செய்து இருக்கும்.  
  • 1. குறுகிய கால அளவிலான தனியார் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டம் 
  • 2. அரசின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டம் 
  • 3, தொடர்ச்சியாக வருமானம் வரும் வகையில் நிரந்தர வட்டி தரும் முதலீட்டுப் பத்திரங்களில் / கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டம் 
  • 4. நீண்ட கால நோக்கில் வளர்ச்சி அடையும் விதமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் திட்டங்கள்  என்று இந்த முதலீட்டு வகைகளைப் பிரிக்கலாம். 
அநேகமாக பல திட்டங்கள் மேல்குறிப்பிட முதலீட்டில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட திட்டங்களின் தொகுப்பாக இருக்கும். அதாவது ஒரு திட்டம் எழுபது முதல் எண்பது சதவிகிதம் பங்குச் சந்தையிலும், இருபது முதல் முப்பது சதவிகிதம் வரை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம். 

பங்குச் சந்தை முதலீட்டில் எந்த முப்பது நிறுவனங்களின் பங்கு விலை முலமாக மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் தீர்மானிக்கப் படுகிறதோ, அந்த நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்யும் நிதித்திட்டங்கள், தேசியப் பங்குச் சந்தை எண்ணை நிர்ணயம் செய்யும் நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்யும் திட்டங்கள், பலதரப் பட்ட பங்குகளில் முதலீடு செய்யும் திட்டங்கள், துறை சார்ந்த பங்குகளில் மட்டும் ( உதாரணமாக வங்கிப் பங்குகள் / மென்பொருள் நிறுவனங்கள் / மருத்துவப் நிறுவனங்கள் / மக்களின் அன்றாடம் பயன் படுத்தும் FMCG நிறுவனங்கள் ) முதலீடு செய்யும் திட்டங்கள் என்று பலவிதமாக முதலீட்டுத் திட்டங்கள் இருக்கிறது. 

 முதலீடு செய்பவர்களின் தேவை, முதலீட்டின் கால அளவு, அவர்களின் நட்டத்தைத் தாங்கும் திறன் இவைகளைப் பொருத்து  எந்தத் திட்டம் தங்களுக்கு உகந்தது என்பதை முதலீட்டாளர்கள் முடிவு செய்ய வேண்டும்.