திங்கள், 31 ஆகஸ்ட், 2015

பரஸ்பர நிதி - சாதகங்கள்

இன்றைய நிலையில் தென்னைமரத்தில் தேள் கொட்டினால், பனைமரத்தில் நெறி கட்டுவது போல, உலகின் எதோ ஒரு முலையில் எதோ ஒரு நாட்டில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி உலகின் பல இடங்களில் எதிரொலிக்கிறது. இவைகளை எல்லாம் அறிந்து, அதனால் ஏற்படும் பொருளாதார விளைவுகளை யூகிக்கும் மதி நுட்பம் எல்லோருக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. பரஸ்பரநிதி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பொருளாதார வல்லுனர்கள் நம்மைக் காட்டிலும் இந்தத் துறையில் தேர்ச்சி அடைந்தவர்களாக இருப்பார்கள். எனவே பரஸ்பரநிதி மூலமாக முதலீடு செய்வதன் முக்கியமான பலன் என்பது துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனை என்பதே ஆகும். இந்த ஆலோசனைக்காக நிறுவனம் வாடிகையாளர்களிடம் வசூலிக்கும் கட்டணம் என்பது மிகக் குறைவு.

அடுத்தபடியாக நேரடியாகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப் பெரிய அளவிலான பணம் தேவைப்படும். சிறந்த நிறுவனங்களின் பங்குகளின் விலை மிக அதிகமாக இருக்கும். மேலும் முதலீட்டாளர் நட்டம் அடைவதைத் தவிர்க்க வேண்டும் என்றால், பல்வேறு நிறுவனங்களின் பங்குகளில் தனது முதலீட்டைப் பரவலாக்கவேண்டும். இது பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே முடிந்த செயலாக இருக்கும். பல நிறுவனங்களில் ரூபாய் ஐநூறு அல்லது ரூபாய் ஆயிரத்தில் நமது முதலீட்டைத் தொடங்கலாம். வங்கிக் கணக்கும், வருமானவரித்துறை வழங்கும் நிரந்தரக் கணக்கு எண் இவை இரண்டும் இருந்தால், முதலீட்டை ஆரம்பித்து விடலாம். 

மேலும், முதலீட்டாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்றார்ப்போல உள்ள முதலீட்டைத் தேர்வு செய்யும் வசதி மற்றும் மிகக் குறைவான கால அவகாசத்தில் தங்கள் முதலீட்டைப் பணமாக மாற்றிக்கொள்ளும் வசதி ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

மேலும் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை மாதாமாதம் பரஸ்பரநிதியில் சேமிக்கும் போது, Rupee - Cost Average என்கிற முறையில் நீண்ட கால நோக்கில் கிடைக்கும் வளர்ச்சி அதிகமாக இருக்கும். நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு நமக்குக் கிடைப்பது UNITS என்று அழைக்கப்படும் அலகுகள். இந்த அலகுகளின் விலை அதிகமாக இருக்கும் போது, நமக்குக் கிடைக்கும் அலகுகளின் எண்ணிக்கை குறைவாகவும், அவைகளின் விலை குறைவாக இருக்கும் போது நமக்குக் கிடைக்கும் அலகுகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும். நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது, ஒரே தவணையாக முதலீடு செய்வதைவிட, மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதுதான் சரியான வழிமுறை. 

உதாரணமாக இந்தப் படங்களப் பாருங்கள்

இரண்டு வருட கால அளவில் மாதம் ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் வீதம் ஒரு பரஸ்பரநிதி நிறுவனத்தில் ஒருவர் முதலீடு செய்து வந்தார். ஒவ்வொரு மாதம் முதல் தேதி அன்று அந்த நிதியின் Net Asset Value மற்றும் அவருக்குக் கிடைக்கும் அலகுகளின் எண்ணிக்கை இதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

இரண்டு வருடம் முடிவில் அவர் சேமித்த தொகை ரூபாய் இருபத்தி நான்காயிரம். அவர் வசம் இருக்கும் அலகுகளின் எண்ணிக்கை 1451.65. அந்த அலகுகளின் மொத்த மதிப்பு ரூபாய் 35,404.27. அவருக்குக் கிட்டிய வளர்ச்சி 46.44%. 

ஆனால் அவர் அதே இருபத்தி நான்காயிரத்தை 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரே தடவையாக முதலீடு செய்து இருந்தால் அவரிடம் 2133.72 அலகுகள் இருந்து இருக்கும். அவைகளின் மொத்த மதிப்பு ரூபாய் 52,041.43
ஆக இருந்து இருக்கும்.

ஆனால் இந்த இரண்டாண்டு காலகட்டத்தில் பங்குச்சந்தை பெரிய அளவில் பின்னடைவைச் சந்திக்கவில்லை. இதே நிதியில் ஒருவர் 2011 ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு வருட காலத்திற்கு இதே ஆயிரம் ரூபாயை சேமித்து வந்தால் கிடைத்து இருக்கும் வளர்ச்சியை இந்தப் படங்கள் காட்டுகிறது.

இந்தக் காலகட்டத்தில் அவருக்குக் கிடைத்து இருக்கும் அலகுகளின் எண்ணிக்கை 2233.20 என்றும் அவரது அலகுகளின் மதிப்பு 26,356.24 என்றும் இருக்கும். அதாவது அவரது சேமிப்பின் வளர்ச்சி என்பது 10.1% இருக்கும்.

ஒருவேளை அவர் 2011 ஆகஸ்ட் மாதம் முதல் இன்று வரை ( 2015 ஆகஸ்ட்) வரை தனது மாதாந்திர சேமிப்பை ரூபாய் ஆயிரம்வீதம் இதே நிதியில் சேமித்து இருந்தார் என்றால் அவர் வசம் 3684 அலகுகளும், அதன் மதிப்பாக ரூபாய் 89,877/- இருந்து இருக்கும். அதாவது அவர் சேமிப்பின் வளர்ச்சி என்பது 33.89% ஆக இருக்கும்.

முன்னமே  சொன்னதுதான், சிறிய அளவிலான சேமிப்பு, அதுவும் நீண்ட கால நோக்கில், நடுவில் முறிக்காமல் சேமிப்பை வளரவிட்டால் கிடைக்கும் வளர்ச்சி என்பது மிக அதிகமாக இருக்கும்.

எல்லா நிதித் திட்டங்களும் இந்த அளவு வளர்ச்சியைத் தருமா என்றால் தராது என்பதுதான் பதில். உதாரணமாக இதே காலகட்டத்தில் மற்றொரு நிதித் திட்டம் எந்த அளவு வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று பார்ப்போம்.


அதே ஆயிரம் ரூபாய் மாத முதலீடு, அதே கால அளவு, ஆனால் அவர் செலுத்திய நாற்பத்தி எட்டாயிரம் என்பது ஐம்பத்தி ஐந்தாயிரத்து நூற்றி ஐம்பது நான்காக மட்டுமே உயர்ந்து உள்ளது. அதாவது பணவீக்கவிகிதத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தால் இது ஒரு நல்ல சரியான லாபகரமான முதலீடு இல்லை. 

எல்லா முதலீடும் ஒரே போன்ற வளர்ச்சியைக் காண்பதில்லை என்பதை நிருபிக்கவும், எல்லா முதலீட்டிலும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு என்பதைக் காட்டவுமே இதைப் பகிர்ந்தேன். 

எதோ ஒரு பரஸ்பரநிதித் திட்டம் என்று முடிவு செய்யாமல், சரியான நிர்வாகம் உள்ள, ஏற்கனவே சந்தையில் அறிமுகம் உள்ள அனுபவசாலிகள் இருக்கும் திட்டங்களில் முதலீடு செய்வதே சரி.