சனி, 11 நவம்பர், 2017

விதி சமைப்போர் வருக

பல்லாண்டுகளுக்கு முன் நாம் விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம். . அரைகுறையாக அல்ல முழுமையாக அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றும் காலம் இன்று கனிந்து இருக்கிறது. நள்ளிரவு நேரத்தில், உலகமே உறங்கிக்கொண்டு இருக்கும்போது இந்தியா உயிர் துடிப்போடு விடுதலைக்காக விழித்து எழுந்து இருக்கிறது. வரலாற்றின் பக்கங்களில் மிக அரிதாகவே நடக்கக்கூடிய நிகழ்ச்சி இது. பல்லாண்டுகளாக அடக்கப்பட்ட ஒரு நாட்டின் ஆன்மா இன்று விழித்தெழுகின்றது. ஒரு யுகத்தின் முடிவாக பழமையில் இருந்து புதுமைக்கு நாம் நடக்க இருக்கிறோம். இந்த நேரத்தில் இந்தியாவுக்காகவும், அதன் மக்களுக்காகவும் அதைவிட மானுட சமுதாயத்திற்க்காகவும் நாம் நம்மை அர்பணித்துக்கொள்வோம். 

வரலாற்றுப் புகழ்பெற்ற இந்த வாசகங்கள் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேருவால் இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது கூறப்பட்ட வாசகங்கள். ஆனால் நேருவின் இந்தக் கனவு நனவாக இந்தியா ஏறத்தாழ அறுபத்தி ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது.

2014ஆம் ஆண்டு மே மாதம் ஒரு புது யுகத்தின் தொடர்ச்சியாக அமைந்தது. எந்த கூட்டணியும் இல்லாது அறுதிப் பெரும்பான்மையோடு திரு நரேந்திரதாஸ் மோதி அவர்களின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி  ஆட்சியை அமைத்தது. மூன்றாண்டுகளில் பாஜகவின் சாதனைகள் என்ன என்றும், அதைவிட இன்னும் எதையெல்லாம் செய்யவேண்டும் என்பதையும் சற்றே பார்ப்போம்.

நெடுஞ்சாலைத்துறை : 

ஒரே இடத்தில் தேங்கி நிற்காமல், பயணங்களை மேற்கொண்ட மனிதர்களே நாகரிகத்தை உலகெங்கும் பரப்பினார்கள். பயணம் மேற்கொள்ள முக்கியமான தேவை நல்ல சாலைகள். அதனால்தான் இரண்டாயிரம் வருடங்கள் கழிந்த பின்னரும் அசோகரைப் பற்றியும் இன்ன பிற சிறந்த அரசர்களைப் பற்றியும் படிக்கும் போது அவர்கள் பயணிகள் செல்ல சாலைகளை அமைத்தார்கள், அதில் நிழல் தரும் மரங்களை நட்டனர் என்று படித்துக்கொண்டு இருக்கிறோம்.

இந்தியா முழுவதையும் நான்குவழிச் சாலைகளால் இணைக்க வேண்டும் என்று யோசிக்க அதனை உருவாக்க பாஜகவின் மூத்த தலைவர் வாஜ்பாய் ஆட்சிக்கு வரவேண்டி இருந்தது. 1980 ஆண்டில் 29,23 கிலோமீட்டர் அளவில் இருந்த தேசிய நெடுஞ்சாலை 2012ஆம் ஆண்டு முடிவில் 76, 818 கிலோமீட்டராக உயர்ந்தது. ஏறத்தாழ 47,000 கிலோமீட்டர் என்ற அளவில் புதியதாக தேசிய நெடுஞ்சாலை முப்பத்தி இரண்டு ஆண்டுகளில் அமைக்கப்பட்டது. அதில் 23,800 கிலோமீட்டருக்கான சாலை 1997 - 2002 காலகட்டத்தில், அதாவது வாஜ்பாய் பிரதமராக இருந்த ஐந்து ஆண்டுகளில் அமைக்கப்பட்டது. அதாவது ஆறில் ஒரு பங்கு காலமே ஆட்சி செய்த வாஜ்பாய் ஐம்பது சதவிகிதமான சாலைகளை அமைத்தார். ( 1 ) இது யாரோ சங்கிகளோ அல்லது பக்தர்களோ தரும் தகவல் அல்ல. உச்சநீதிமன்றத்தில் 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு தாக்கல் செய்த தகவல் இது.

மோதி தலைமையிலான அரசு நாள் ஒன்றுக்கு 41 கிலோமீட்டர் சாலை அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு தொடங்கி நாள் ஒன்றுக்கு 22 கிலோமீட்டர் என்ற அளவில் சாலைகளை அமைத்து இருக்கிறது. 2016 - 2017 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 8,200 கிலோமீட்டர் அளவில் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது ( 2 )


துறைமுகங்கள் : 

நளி இரு முந்நீர் நாவாய் ஒட்டி 
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக !  ( புறம் 66 ) 

காற்றின் ஆற்றலை வென்று அதனை அடக்கி ஆண்டு அலைக்கடலில் கப்பல் ஒட்டியவர்களின் வாரிசே என்று கரிகால்பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் புகழ்ந்து பாடும் பாடல் இது. அப்படி திசையெங்கும் கப்பல் ஒட்டவும், அதன்மூலம் வாணிபத்தைப் பெருக்கவும் பாஜக அரசு புதியதாக 12 துறைமுகங்களை உருவாகும் பணியில் இருக்கிறது ( 3)
 அதோடு இணைந்து 14 கடற்கரை பொருளாதார மண்டலங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன ( 4 ). சரக்குகளை கையாளும் செலவு சீனாவை ஒப்பிடும்போது இந்தியாவில் 35% அதிகமாக உள்ளது. இதனால் நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களின் விலைகளும் அதிகமாக உள்ளது. சாகர்மாலா என்ற இந்த திட்டத்தினால் பொருள்களைக் கையாளும் செலவு கணிசமான அளவிற்கு குறைக்கப்படும்.

விமானப் போக்குவரத்து: 

இந்தியாவில் 499 விமானநிலையங்களும், விமானம் ஏறி இறங்க வசதியான ஓடுதளங்களும் உள்ளன. அதில் 80 விமானநிலையங்களே இன்று பயன்பாட்டில் உள்ளன. பயன்பாட்டில் இல்லாத பல விமான நிலையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் பாஜக அரசு ஈடுபட்டு உள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக அதாவது 500 கிலோமீட்டர் தொலைவுக்கான பயணத்தை ரூபாய் 2,500/- என்ற அளவில் பயணிக்கும் கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது ( 5 )

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவையில் சர்வதேச விமான நிலையங்களும் ஓசூர், நெய்வேலி, சேலம், தூத்துக்குடி, வேலூர் ஆகிய நகரங்களில் உள்நாட்டு விமான நிலையங்களும் உள்ளன. ( 6 ) சரியான திட்டமிடல் இருந்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் வேலைக்காக தலைநகர் சென்னைக்கு பயணிக்கும் நேரமும், அங்கே தங்கி இருக்கும் செலவும் இல்லாமலேயே போய் விடும்தானே.

மோதி அரசில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது ரயில்வே துறை என்றால் அது மிகை அல்ல. 2009 - 2014ஆம் ஆண்டு காலகட்டத்தில் சராசரியாக 1500 கிலோமீட்டர் அகல ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. ஆனால் 2015 - 2016ஆம் ஆண்டில் மட்டும் 2,800 கிலோமீட்டர் அளவில் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இதே காலகட்டத்தில் சராசரியாக 1184 கிலோமீட்டர் அளவில் நடைபெற்றுவந்த மின்மயமாக்கல் ( Electrification ) 1730 கிலோமீட்டராக உயர்ந்து உள்ளது. சமுதாய வலைத்தளங்கள் மூலம் பயணிகள் தெரிவிக்கும் குறைகள் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது. பல்லாண்டுகளாக இணைக்கப்படாமல் இருந்த வடகிழக்கு மாநிலங்களுக்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ( 7 )



உள்கட்டுமானப் பணிகள் 

குஜராத் மாநிலத்தில் தொடங்கி ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம் வழியாக  உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பிஹார், மேற்கு வங்காளம் என்று தொடர்ந்து சிக்கிம், அசாம், அருணாச்சல பிரதேசம் என்று கடந்து மணிப்பூர் மிசோரம் வரை சாலை வழியாக இணைக்கும் பாரதமாலா திட்டம் என்றும்



இந்தியாவின் துறைமுகங்களை நவீனமயமாக்கி, புதிய துறைமுகங்களை அதோடு இணைந்த கடல்சார் பொருளாதார மண்டலங்களையும் உருவாகும் சாகர்மாலா திட்டம் எனவும் இந்தியாவின் உள்கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்துகொண்டு இருக்கின்றன.



சேது பந்தனம் என்ற பெயரில் இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் ரெயில்வே பாதைகளில் மேம்பாலம் மற்றும் 1500 இடங்களில் உள்ள பழைய மேம்பாலங்களை விரிவாக்கும் பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன.

இந்தியாவில் உள்ள நதிகளின் வழியாக சரக்கு மற்றும் ஆட்கள் போக்குவரத்தை முன்னெடுக்கும் முயற்சிகளும் ஆரம்பமாகி உள்ளது. ( 8 )


அனைவருக்குமான வங்கி சேவை : 

பல்லாண்டுகளாக இந்தியாவின் ஏழை எளிய மக்கள் நெருங்காமலே இருந்த நிலையை மாற்றி அவர்களையும் வங்கி சேவைக்குள் கொண்டு வந்தது மோதி அரசின் மிகப்பெரும் சாதனை. இன்றய தேதியில் ( 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பது கோடி மக்கள் வங்கி சேவைக்குள் வந்து உள்ளனர். அவர்கள் மூலம் ஏறத்தாழ 67 ஆயிரம் கோடி ரூபாய்கள் சேமிக்கப்பட்டு உள்ளது. அநேகமாக இன்றய நிலைமையில் வங்கி கணக்கு இல்லாத குடும்பமே இல்லை என்று கூறி விடலாம் ( 9 )




முத்திரை பாதிக்கும் முத்திரா திட்டம் : 

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டில் அனைவருக்கும் அரசு வேலை என்பது சாத்தியமில்லாத ஓன்று. அதுபோக நமது பொருளாதாரம் என்பதே சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களை நம்பியே உள்ளது. அப்படிப்பட்ட தொழில்முனைவோர்களை உருவாக்கவும் அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவவும் உருவானதே முத்திரா திட்டம். இதன்படி ரூபாய் ஐம்பதாயிரம் முதல் ரூபாய் பத்து லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு செப்டம்பர் வரை மூன்றரைக் லட்சம் கோடி ரூபாய்கள் கடனாக வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலமாக ஐந்தரை கோடி வேலைவாய்ப்புகள் உருவாகி இருக்கிறது ( 10 )

அதிலும் தமிழகத்தில் மட்டும் ஐம்பத்திமூன்று லட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு ரூபாய் பதினெட்டாயிரம் கோடி ரூபாய்களுக்கு மேலாக கடன் வழங்கப்பட்டு உள்ளது. ( 10 a ) \




சமையல் எரிவாயு : 

இந்தியாவில் உள்ள 24 கோடி குடும்பங்களில் ஏறத்தாழ 10 கோடி குடும்பங்கள் தங்களின் உணவைத் தயாரிக்க விறகு, கரி போன்றவற்றையே நம்பி உள்ளனர். அவர்களுக்கு சமையல் எரிவாயு உருளை தரும் திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டு உள்ளன ( 11 ) இதனால் புதிதாக 5000 எரிவாயு உருளைகள் விநியோகஸ்தர்களும் உருவாகி உள்ளனர்


மோதி ஆட்சிக்கு வரும்வரை சமையல் எரிவாயு உருளைக்கான மானியம் என்பது எல்லோருக்கும் வழங்கப்பட்டு வந்தது. மோதி வசதி படைத்த மக்களை அந்த மானியத்தை வேண்டாம் என்று விட்டுக் கொடுக்குமாறு கோரினார். அதோடு மானியவிலையில் வாங்கி அதனை உணவுவிடுதி / தொழில் செய்ய என்று பயன்படுத்தி வந்ததை தடுத்து நிறுத்தினார். இதனால் பொதுமக்கள் பணம் 21,000 கோடி ரூபாய்க்கும் மேலாக சேமிக்கப்பட்டு உள்ளது


சூரிய ஒளியின் மூலமாக மின் உற்பத்தி :

நாடு வளர்ச்சி அடையும் போது அதோடு இணைந்தே மின்சாரத்தின் தேவையும் அதிகரிக்கும். அதனை சமாளிக்கவும் வேண்டும், அதே நேரத்தில் அதற்காக நிலக்கரியையோ அல்லது பெட்ரோலையோ இறக்குமதி செய்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். இந்த பிரச்சனைக்கு தீர்வாக மாற்று வழிகளில் மின்சார உற்பத்தி என்பது முன்னெடுக்கப்பட்டு உள்ளது. சூரிய ஒளியைப் பயன்படுத்தி இன்று பன்னிரெண்டாயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்தப்படுகிறது. மோதி பதவியேற்கும் ஆண்டில் இது இரண்டாயிரத்து அறுநூறு மெகாவாட்டாக இருந்தது. அதாவது மூன்று ஆண்டுகளில் ஆறு பங்கு வளர்ச்சி. ( 12 )

அதுமட்டுமல்ல தூய்மையானதும், செலவு குறைவானதுமான மாற்று வழிகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் மோதி அரசு நிலக்கரியால் இயங்கும் பதினாலாயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யத் திட்டமிட்ட மின் நிலையங்களை தேவை இல்லை என்று நிறுத்தி விட்டது. ( 13 ) இதன் மூலமாக தேவையில்லாத நிலக்கரி இறக்குமதியும் அதனால் ஏற்படும் நமது பணம் வெளிநாடுக்குச் செல்வதும் தடுக்கப்பட்டு உள்ளது.


மின்சேமிப்பு :

மின்சார உற்பத்தியைப் பெருக்குவது என்பது ஓன்று, அதே நேரத்தில் மின்சாரத்தை சரியாக பயன்படுத்தி, அதனால் மின்சாரத்தை சேமிப்பது என்பது இன்னொரு வழி. அதற்கான உத்திதான் LED பல்புகள் மற்றும் மின்விசிறிகள் வழங்கும் திட்டம். இதன்படி நாடெங்கும் 25 கோடிக்கும் மேலான LED பல்புகள் வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் பதினாலாயிரம் கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் பணம் சேமிக்கப்பட்டு உள்ளது. ( 14 )



சுகாதாரம் :

தான் பதவியேற்ற ஆண்டிலேயே மோதி தனது குறிக்கோளாக குறிப்பிட்டது நாடு முழுவதும் கழிப்பறைகள் இல்லாத வீடுகளே இருக்கக்கூடாது என்பதுதான். ஸ்வட்ச் பாரத் திட்டத்தின்கீழ் இரண்டரை கோடிக்கும் மேலான கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. ( 15)



இதுமட்டும் அல்ல நாட்டுமக்கள் அனைவருக்கும் ஆதார் எண் கொடுத்தாலும், அதனை அவர்கள் வங்கி கணக்கோடு இணைத்ததாலும், மக்களுக்கான மானியத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குக்கே செலுத்துவதன் மூலம் மூன்றாண்டுகளில் பாஜக அரசு ஏறத்தாழ ஐம்பதினாயிரம் கோடி ரூபாயை முறைகேடாக செல்வதைத் தடுத்து இருக்கிறது. ( 16 ) மானிய விலையில் யூரியாவை வாங்கி அதனை வெளிச்சந்தையில் விற்பதை தடுக்கும் விதமாக விவசாயத்திற்குப் பயன்படும் யூரியாவில் வேப்பெண்ணெய்யை கலப்பதன் மூலம், அதனை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலைமையை இந்த அரசு ஏற்படுத்தி உள்ளது. தேவையில்லாதவர்களுக்கு மானியங்கள் செல்வதைத் தடுக்கும் இந்த முயற்சியும் மிகச் சிறந்த பலனை உருவாக்கி உள்ளது.

இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகள் எவையெல்லாம், அதில் எதெல்லாம் நிறைவேறி உள்ளது, எவையெல்லாம் நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றது. எவை எல்லாம் இன்னும் சிறப்பாக செய்யப்படவேண்டும், எவை முன்னெடுக்கப்படவில்லை என்ற தகவல்கள் இந்த இணையத்தளத்தில் உள்ளன. ( 17 )

இவை எல்லாவற்றையும்விட முக்கியமான முன்னேற்றம் என்பது இந்த மூன்றாண்டு காலத்தில் இந்த அரசின்மீது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்பதுதான்.

அதைவிட முக்கியானது என்று நான் கருதுவது இந்த மூன்றாண்டில் இணையதளங்களின் புழங்கும் பலரை மிகக்குறுகிய காலத்தில் பொருளாதார நிபுணர்களாக, அரசியலமைப்பு வல்லுனர்களாக, கல்வியாளர்களாக, வெளியுறவுத்துறை வித்தகர்களாக, பாதுகாப்புத்துறை அறிஞர்களாக, சுற்றுப்புறச்சூழல் வல்லுனர்களாக அதைவிட முக்கியமாக கேலிச்சித்திரங்கள் ( மீம்ஸ் ) உருவாக்குபவர்களாக மாற்றியதுதான்.

இந்த அரசு இன்னும் என்ன செய்யவேண்டும் என்று கேட்டால் தனிப்பட்ட முறையில் வருமானவரி வரம்பு குறைந்தபட்சம் வருடம் ஒன்றுக்கு ஐந்து லட்ச ரூபாயாக உயர்த்தப்படவேண்டும். சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் அகற்றப்படவேண்டும் அல்லது சுங்கம் குறைக்கப்பட வேண்டும். பயன்படாமல், அழுகிப்போகும் உணவுப்பொருள்களை பத்திரப்படுத்தும் குளிரூட்டி நிலையங்கள் எல்லா தாலுகா அளவிலும் நிறுவப்படவேண்டும்.இதுபோன்ற செயல்களை இந்த அரசு செய்யும் என்று நான் நம்புகிறேன்.

விதி சமைக்கும் வழியில் உள்ள பிரதமருக்கு நமது நல்வாழ்த்துகளை, ஆதரவை வழங்குவோம். ஒருவேளை தவறு செய்வதுபோல் தெரிந்தால் அதனை சுட்டிக்காட்டுவோம். நாட்டின் முன்னேற்றம் என்பது நம் எல்லோரின் பொறுப்பும்தான். அதனைவிட்டுவிட்டு வெறும் வெறுப்பை உமிந்துகொண்டு இருப்பதில் எந்தப்பயனும் இல்லை.


தரவுகள்


சாலைகள்

1, https://timesofindia.indiatimes.com/india/NDA-regime-constructed-50-of-national-highways-laid-in-last-30-years-Centre/articleshow/20869113.cms

2 (a) http://www.hindustantimes.com/india-news/government-constructs-22-km-of-roads-per-day-misses-target-of-41-km-by-half/story-nLLJazVO6TZlzgx7lIu7iO.html

2 (b) http://www.thehindu.com/business/Industry/pace-of-laying-of-roads-rises-to-22-km-daily-in-2016-17/article18113295.ece

துறைமுகம்

3, https://www.joc.com/international-trade-news/infrastructure-news/asia-infrastructure-news/indian-port-development-program-makes-strides_20170110.html

4, http://www.firstpost.com/india/sagarmala-project-proposes-14-coastal-economic-zones-across-india-3130866.html

4 ( a ) http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=159037

விமானப் பயணம் 

5, http://www.india.com/news/india/udan-scheme-list-of-45-new-airports-over-70-new-routes-announced-today-5-airlines-make-the-cut-1976363/

6, https://en.wikipedia.org/wiki/List_of_airports_in_India#Tamil_Nadu

ரயில்வேத்துறை

7, http://trak.in/info/2790-indian-railways-suresh-prabhu-achievements/

உள்கட்டுமானம் :

8 ( a ) http://www.financialexpress.com/india-news/narendra-modis-top-10-signature-infrastructure-projects-to-power-new-india/613121/

8 ( b ) https://www.macquarie.com/cn/about/newsroom/2016/infrastructure-improvement-in-india

8 ( c ) https://www.bloomberg.com/news/articles/2017-02-01/modi-plans-59-billion-rail-road-push-as-bombardier-ge-invest

அனைவருக்குமான வங்கி சேவை : 

9 ( a ) https://www.pmjdy.gov.in/account

9 ( b ) http://www.livemint.com/Opinion/wfertnZlyGRTmGiyGnJLrI/The-admirable-success-of-the-JanDhan-Yojana.html

முத்திரா திட்டம் 

10,  https://economictimes.indiatimes.com/news/economy/policy/narendra-modis-mudra-yojana-generates-5-5-crore-jobs-says-report/articleshow/60435774.cms

10 ( a ) http://www.newindianexpress.com/states/andhra-pradesh/2017/oct/09/at-10th-rank-andhra-pradesh-lags-in-mudra-loan-disbursal-1668849.html


சமையல் எரிவாயு : 

11 ( a )  http://www.livemint.com/Industry/cTycVe4kwGtmRNjvowf8BO/Ujjwala-scheme-for-LPG-connections-now-has-25-crore-benefic.html

11 ( b ) https://timesofindia.indiatimes.com/business/india-business/plugging-lpg-subsidy-leaks-leads-to-rs-21000-crore-savings/articleshow/57022255.cms


சூரிய ஒளியின் மூலமாக மின் உற்பத்தி 

12,  http://www.newindianexpress.com/business/2017/apr/10/indias-solar-power-generation-capacity-crosses-12-gw-energy-minister-1592126.html

13, http://www.independent.co.uk/environment/india-solar-power-electricity-cancels-coal-fired-power-stations-record-low-a7751916.html

மின்சேமிப்பு 

14,  https://economictimes.indiatimes.com/industry/energy/power/over-25-crore-led-bulbs-distributed-under-ujala-scheme-eesl/articleshow/59635515.cms

சுகாதாரம் 

15, http://swachhindia.ndtv.com/httpswachhindia-ndtv-com5-year-report-card-shows-massive-growth-indias-sanitation-coverage-6232-6232/

16, https://economictimes.indiatimes.com/news/economy/finance/direct-benefit-transfer-leads-to-rs-50000-crore-savings-for-government-in-3-years/articleshow/57240387.cms

17, http://www.electionpromisestracker.in/governments/central-government/  

ஞாயிறு, 19 மார்ச், 2017

நீட்டாக ஒரு தேர்வு

இந்திய மருத்துவக் கவுன்சில் தந்திருக்கும் தகவலின் படி இந்தியாவில் 462 மருத்துவக் கல்லூரிகளில் சற்றேறக்குறைய அறுபத்திநான்காயிரம் மாணவர்கள் வருடாவருடம் சேருகிறார்கள். (1). இந்தியாவில் மருத்துவப்படிப்பு  அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மூலமாக கற்பிக்கப்படுகிறது.

மொத்த இடங்களில் கர்நாடகா, மஹாராஷ்டிரா, தமிழகம் என்ற மூன்று மாநிலங்களில் மட்டும் பத்தொன்பதாயிரம் இடங்கள் உள்ளன. அதாவது இந்த மூன்று மாநிலங்களில் 30 % இடங்கள் உள்ளன.

தொடக்கக் கல்வி முதல் உயர் கல்விவரை லாபநோக்கில்லாத நிறுவனங்களும், தர்மஸ்தாபனங்களும்தான் கல்வி நிறுவனங்களை நடத்தமுடியும் என்ற விதி இந்தியாவில் இருக்கிறது. அதாவது கல்வி என்பது விற்பனைக்கில்லை என்ற உயரிய நோக்கில் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் உண்மை நிலவரம் இதற்கு முற்றிலும் வேறாக இருக்கிறது. தனியார் நிறுவனங்களில் மிகப் பெரும்பான்மை நிறுவனங்கள் இலவசமாகவோ இல்லை குறைந்த கட்டணத்திலோ கல்வியை அளிப்பதில்லை. அந்த கல்வி  நிறுவனங்களின் கட்டமைப்பு, அதில் பணி புரியும் ஆசிரியர்களின் தகுதி, அங்கே படித்து முடிப்பவர்களுக்குக்   உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்பு அல்லது அவர்களுக்கு கிடைக்கும் கிடைக்கும் வேலை வாய்ப்பு இவைகளை பொறுத்து சில ஆயிரங்களில் இருந்து பல லட்சம் வரை இந்த நிறுவனங்கள் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கின்றன. இது அனைவருக்கும் தெரிந்து உண்மை, ஆனால் இதை வெளிப்படியாகப் பேசும் ஆட்களின் எண்ணிக்கை என்பது இல்லவே இல்லை. 

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒரு குறிப்பிட்ட அளவிலான இடங்களை நிரப்புகிறது. மீதி உள்ள இடங்களை தனியார் நிறுவனங்களே நிரப்புகின்றன. இந்த சேர்க்கையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல லட்சங்களில் பணம் வசூலிக்கின்றன. இந்தப் பணம் முழுவதும் அரசாங்கத்தின் கணக்குக்குள் வராமலேயே கறுப்புப் பணமாகவே பரிமாற்றம் நடக்கிறது. 

இதுபோக அரசு மருத்துவக் கல்லூரிகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தங்களது மொத்த இடங்களில் 15% இடங்களை மத்திய அரசுக்குச் சமர்ப்பித்து, அந்த இடங்களை மத்திய அரசு நிரப்புகிறது. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை. +2 மதிப்பெண்களின் தரவரிசையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதே நேரத்தில் பல மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மற்றும் வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் போன்ற நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து வருவதும் எல்லோரும் அறிந்த உண்மை. இப்படியான பல தேர்வுகள் என்பது மாணவர்களுக்கு தேவையில்லாத மன உளைச்சலையும், பொருளாதார நெருக்கடியையும் உருவாக்குகிறது. 

உலகில் பல நாடுகளில் இப்படி பல்வேறு தேர்வு நடப்பது இல்லை. ஒரே தேர்வின் மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அதன்மூலமே கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த முறைக்கான முதல்படிதான் NEET தேர்வு. இது ஒரு தேசிய அளவிலான தகுதித் தேர்வு. இந்த முறைப்படி மாணவர்கள் ஒரே தேர்வை மட்டுமே எழுதினால் போதும். அந்தத் தேர்வின் படி மாணவர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள். அதன்படி மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடத்தப்படும்.  

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்விநிலையங்களில் உள்ள 15% மத்திய அரசு இடங்களையும், மாநில அரசு நிரப்பும் இடங்களையும், தனியார் கல்வி நிறுவனங்கள் நிரப்பும் வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்கள் சேர்க்கை மற்றும் நிர்வாகம் நிரப்பும் இடங்களும் இந்தத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடக்கும். 

இந்தத் தேர்வானது 180 கேள்விகளைக் கொண்டதாக இருக்கும். நான்கு பதில்களுக்குள் சரியான பதிலை மாணவர்கள் தேர்வு செய்யவேண்டும். இந்தக் கேள்விகள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ( விலங்கியல் மற்றும் தாவரவியல் ) பாடங்களில் இருந்து கேட்கப்படும். 

ஆனால், தமிழகத்தில் பல அரசியல்வாதிகள் இந்த நுழைவுத்தேர்வை எதிர்க்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்களையும் அதன் உண்மைகளையும் நாம் ஆராய்ந்து பார்ப்போம். 

1, இதனால் இடஒதுக்கீடும் சமூக நீதியும் பாதிக்கப்படும் 

உண்மை என்னவென்றால் மத்திய அரசு ஒதுக்கீடு போக மீதி உள்ள 85% இடங்களை மாநில அரசு அவர்கள் வைத்திருக்கும் இடஒதுக்கீடு கொள்கையின் படி நிரப்பிக்கொள்ளலாம். சேர்க்கப்படும் மாணவர்கள் நீட் தேர்வின் தரவரிசைப்படி இருக்கவேண்டும் என்பது தவிர இடஒதுக்கீட்டில் மத்திய அரசு தலையிடவில்லை.

2, இந்தத் தேர்வை தமிழக மாணவர்களால் எதிர்கொள்ள முடியாது 

நாம்தான் நமது சமச்சீர் கல்வி முறை இந்திய அளவிலில்லை, உலக அளவுக்கான தரத்தில் உள்ளது என்று சொல்லிவந்தோம். இப்போது CBSE பாடத்திட்டத்தில் தரத்திற்கு நமது கல்விமுறை இல்லை என்றால் மாற்ற வேண்டியது பாடத்திட்டத்தையா அல்லது தேர்வு முறையையா ?  தமிழக மாணவர்களின் கல்வித்தரம் என்பது மிகவும் கவலைப்படும் அளவில்தான் இருக்கிறது என்றே ஆய்வுகள் கூறுகின்றன (2) ஏழுமுதல் பதினான்கு வயது வரை உள்ள கிராமப்புற மாணவர்களில் 21% மாணவர்களே ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகங்களைப் படித்துப் புரிந்துகொள்ளும் தகுதியில் இருக்கிறார்கள். 

கலைப்பிரிவில் படித்தால் பொறியியல் படிக்க முடியாது என்பது தெரியாமலே பனிரெண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களும் இங்கேதான் இருக்கிறார்கள். (3)

உலக அளவிலான போட்டிக்கு நம் மாணவர்களைத் தயாரிப்பதை விட்டுவிட்டு, நமது மாணவர்கள் திறமை இல்லாதவர்கள் என்று கூறுவது சரியான கண்ணோட்டமா ? 

இந்திய நாட்டின் எல்லாக் கல்விமுறைகளும் தேசியக்கல்வித் திட்டத்தின் ( 2005) கீழேதான் வடிவமைக்கப்படுகிறது. (4). பல பாடங்களில் சமச்சீர் கல்வி திட்டம் நன்றாகவே வடிவமைக்கப்பட்டு இருந்தாலும்,  எதோ ஒரு காரணத்தால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை. ஆனால் அதுபற்றி ஆராய இது இடமில்லை என்பதால் இங்கே விரிவாக விவாதிக்கவில்லை. 

அதே நேரத்தில் 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை மத்திய பாடத்திட்டத்தில் (C B S E ) படித்த மாணவர்களில் வெறும் எட்டு பேர் மட்டுமே தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர் (5) என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இது சமுதாய நீதிக்குப் புறம்பான செயலா இல்லையா ?

வெறும் மனப்பாடம் செய்யும் முறையையே நமது தேர்வுமுறை முன்னெடுக்கிறது, அதனால் பத்தாம் வகுப்பு வரை மத்தியக் கல்வி முறையில் பயிலும் பல மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பில் மாநில முறைக்கு மாறிக்கொள்கிறார்கள். (6) 

3, தேர்வு பிராந்திய மொழிகளில் நடைபெறவேண்டும் 

தொடக்கத்தில் இந்தத் தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே நடைபெற்றது. இந்த ஆண்டு முதல் தமிழ் உள்பட சில பிராந்திய மொழிகளிலும் நடைபெறுகிறது. 

மாணவர்களின் தாய் மொழியில் தேர்வு நடக்கவேண்டும் என்பது சரியான கருத்துதான் என்றாலும் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளின் பாடப்புத்தகங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருப்பதால் நுழைவுத்தேர்வு ஆங்கிலத்தில் இருப்பது தவறாக ஆகிவிடாது.

நுழைவுத்தேர்வை தாய்மொழியில் எழுதவேண்டும் என்று கூறுபவர்கள், மேற்படிப்பிற்கான பாடங்களைத் தாய்மொழியில் பயில தேவையான பாடப்புத்தகங்களைத் தாய்மொழியில் தயாரிப்பதைப் பற்றி பேசுவதே இல்லை.

4, இது ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு தடையாக  இருக்கும். 

அதாவது தனியார் பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எதிர்கொள்ள முடியும் என்று சிலர் கூறுகிறார்கள். இப்போது உள்ள நடைமுறைப்படி பதினொன்றாம் வகுப்பு பாடங்களை படிக்காமல் இரண்டு வருடமும் பனிரெண்டாம் வகுப்புப் பாடங்களை படித்து அதன் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்து விட முடியும். ஆனால் இந்த நுழைவுத்தேர்வை எழுத ஆறாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரையான பாடங்களைப் புரிந்து படித்தால் மட்டுமே முடியும். 

எனவே தனியார் பயிற்சி நிலையங்களில் பயிற்சி எடுப்பது அல்ல புரிந்து படிப்பதே தேவை. பள்ளிகளில் சரியான முறையில் பாடம் நடத்தினால் தனிப்பயிற்சி என்பதே தேவையில்லை என்பதே உண்மை.அதுபோக அரசே இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ இந்தத் தேர்வுக்கான பயிற்சியை அளிக்கலாம். 

ஏற்கனவே உள்ள சேர்க்கை முறையில் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் பெரிய அளவில் சேரவில்லை என்பதுதான் உண்மை. பெரும்பாலான இடங்கள் தனியார் கல்விநிலையங்களில் படித்த மாணவர்களாலே நிரப்பப்படுகிறது. தகவல் அறியும் சட்டத்தின்படி கிடைத்த உண்மை என்ன என்றால் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஒரு விழுக்காடுக்கும் குறைவாகவே அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அடைந்து இருக்கிறார்கள்.

எனவே நீட் தேர்வுக்கான எதிர்ப்பாளர்கள் சொல்லும் எந்தக் காரணமும் ஏற்கத்தக்கதாக இல்லை.

தேவையான மாற்றங்கள் 

 வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ இந்தத் தேர்வை நடத்தாமல் TOFEL, GMAT, GRE முதலான தேர்வுகளைப் போல வருடத்தின் எந்த நேரத்திலும் மாணவர்கள் இந்தத் தேர்வை கணினி மூலமாக எதிர்கொள்ளும் வகைக்கு மாற்றப்படவேண்டும். இரண்டு முறை மட்டுமே நடக்கும் தேர்வு என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. குறைந்த பட்சம் ஒரு மாணவன் ஐந்து முறை இந்தத் தேர்வை எழுதும் வாய்ப்பும், அதில் அவனுக்கு கிடைப்பதில் மிக அதிகபட்ச மதிப்பெண் எதுவோ அதையே அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் இப்போது இந்தத் தேர்வில் இருந்து விலக்களிப்பப்பட்டு உள்ளன. அவையும் இதற்குள்ளே கொண்டுவரப்பட வேண்டும். இந்த மூன்று மாநிலங்களில் ஏறத்தாழ ஏழாயிரம் இடங்கள் உள்ளன.

எந்த ஒரு திட்டமும் நூறுசதவிகிதம் குறையே இல்லாமல் இருக்காது. குறைகளைக் களைந்து, அதனைச் சரிப்படுத்தவேண்டுமே தவிர, உணர்ச்சிகளைத் தூண்டி அரசியல் செய்வதால் இந்தப் பயனும் கிடைக்கப்போவது இல்லை. மாறிவரும் காலத்தில் நமது மாணவர்கள் உலகளவிலான போட்டிகளுக்குத் தயாராகவேண்டியது மிக அவசியம்.

அரசியல் கூச்சல்களாலும், உணர்ச்சியைத் தூண்டுவதாலும் மாணவர்களின் முன்னேற்றத்தைத் தடுப்பது சரியான வழிமுறை அல்ல. 


ஆதாரங்கள் 

1. http://www.mciindia.org/InformationDesk/ForStudents/ListofCollegesTeachingMBBS.aspx

3. http://www.nisaptham.com/2016/12/blog-post_19.html

4.  http://www.ncert.nic.in/rightside/links/pdf/framework/english/nf2005.pdf

5. http://www.justgetmbbs.com/2016/07/cbse-students-incompetent-Tamil-Nadu-MBBS.html

6. http://m.tamil.thehindu.com/tamilnadu/8-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-278-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article9562070.ece

திங்கள், 23 ஜனவரி, 2017

குரு வணக்கம்

வரலாற்றின் பக்கங்களில் இந்தியா என்றுமே ஒரு கொந்தளிப்பான நாடாகத்தான் இருந்துவந்தது. உலக சரித்திரத்தில் மிக முக்கியமான நாகரீகமாக, உலக வர்த்தகத்தில் முக்கியமான பங்கேற்பாளராக, அளவற்ற செல்வம் நிறைந்த நாடாக, அதனாலே அந்தச் செல்வத்தைக் கவர நினைத்த பலருக்கு ஒரு கனவு தேசமாக, மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களால் படையெடுக்கப்பட்ட தேசமாக, மீண்டும் மீண்டும் தன் வாழ்வுக்கான போராட்டத்தை நடத்திய தேசம் என்றே இந்த நாட்டின் சரித்திரத்தைச் சொல்லிவிடலாம்.

இந்தக் கொந்தளிப்புக்கு சிறிதும் குறைந்ததல்ல சுதந்திரம் அடைந்த பிறகான காலகட்டடமும். நாட்டின் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் இரண்டாக்கப் பிளவுபட்டதும், ஊழலுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் நாடெங்கும் போராட்டங்கள் வெடித்ததும்,  அலகாபாத் நீதிமன்றத்தின் புகழ்பெற்ற தீர்ப்பின் மூலம்  பதவியில் இருக்கும் பிரதமமந்திரியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து பதவியைத் தக்கவைக்க நாடெங்கும் நெருக்கடிநிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு, மக்களின் உரிமைகள் எல்லாம் மறுக்கப்பட்டு, எதிரணியில் இருந்த தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதும் என்று இருந்த காலகட்டம் அறுபதுகளின் கடைசி வருடம் முதல் எழுபதுகளின் பாதிவரை இருந்த வரலாறு.

" நாங்கள் அவர்களை மண்டியிடச் சொன்னோம், அவர்கள் தவழவே செய்தார்கள்" இது அன்றய காலகட்டத்தின் பத்திரிகைகளை பற்றிய அதிகாரத்தின் கூற்று. அரசாங்கத்தின் கொள்கையாக தனிமனிதர்களின் துதிப்பாடல் நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. " இந்தியாவே இந்திரா, இந்திராவே இந்தியா" என்று துதிபாடிகள் புகழ்பாட, ஏழ்மையை ஒழிப்போம் என்ற   கோஷங்களும், பிரதமமந்திரியின் இருபது அம்சத் திட்டமும், அவர் மகனின் ஐந்து அம்சத் திட்டமும் பொன்னுலகைக் கொண்டுவரும் என்ற பிம்பங்களும் கட்டமைக்கப்பட்ட காலம் அது.

இதன் பின்புறத்தில் தனித்து ஒலித்த குரல் திரு சோ ராமஸ்வாமியின் குரல். பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் பிறரை மிரட்டியும், யார் பதவிக்கு வரவேண்டும் யார் வரக்கூடாது என்று தரகு வேலை பார்த்தும், நாட்டின் நலனை, நாட்டு மக்கள் நலனை கருத்தில் கொள்ளாது இருக்கும் நிலையில், தனக்கென ஒரு தனி வழியை, தான் நல்லது என்று நினைக்கும் வழியைத் தேர்ந்தெடுத்து அதில் நடந்தவர் திரு சோ என்பது இன்றய தலைமுறைக்கு ஆச்சர்யம் அளிக்கக் கூடியதாகத்தான் இருக்கும்.

நாடக நடிகராக, திரைப்பட நடிகராக, கதாசிரியராக, இயக்குனராக என்று பல தொழில் செய்தவரின் எல்லாப் பாதைகளும் இறுதியாகச் சங்கமித்த இடம் பத்திரிகை ஆசிரியர் என்றானது. அதிகாரத்தின் மிக நெருக்கமான இடங்களில் இருந்தபோதும் அதை அவர் தனக்கான தனிப்பட்ட பலனுக்காக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை அவர்மீது யாரும் சுமத்த முடியாததே அவரின் தனிவாழ்வின் நேர்மைக்குச் சான்றாகும்.

அரசின் எந்தப் பதவியிலும் இல்லாத திரு சஞ்சய் காந்தி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது. அதைக் கண்டிக்கும் விதமாக அந்த விபத்தில் மரணமடைந்த கேப்டன் சுபாஷ் சாஸ்சேனாவின் தபால் தலையை துக்ளக்கில் வெளியிட்டார். எம் ஜி யார் ஆட்சியை கேலி செய்து அவர் எழுதிய சர்க்கார் புகுந்த வீடு என்ற தொடர் மிகவும் புகழ்வாய்ந்தது.

இந்து மஹா சமுத்திரம், மஹாபாரதம் பேசுகிறது, வால்மீகி ராமாயணம், எங்கே பிராமணன் ஆகிய புத்தகங்கள் ஒரு பண்பாட்டுத் துறையின் ஆரம்பநிலை வாசகன் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள். 

விளையாட்டாகத்தான் அவர் பத்திரிகை ஆரம்பித்தார், ஆனால் அதைத் தொடர்ந்து நடத்தவேண்டிய கட்டாயத்தை கலைஞர் செய்தார். துக்ளக் பத்திரிகையைப் பறிமுதல் செய்து, கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு புத்தகம் வாங்கவைத்த பெருமை அன்றைய முதல்வரையே சாரும். இப்படிப்பட்ட கைங்கரியத்தைச் செய்தவரைதான் மாபெரும் அரசியல் அறிஞர் என்றும், மூத்த பத்திரிகையாளர் என்றும் கருத்துரிமையின் காவலர் என்று சிலர் சொல்லித் திரிகின்றனர்.

அதையும் தாண்டி நெருக்கடிநிலைமையைக் கலைஞர் எதிர்த்ததை பாராட்டி, மத்திய அரசை விமர்சிக்கும் உரிமை கிடைக்கும்வரை மாநில அரசை விமர்சிக்கப் போவது இல்லை என்று சொன்னவர். தணிக்கைத்துறை அதிகாரிகளிடம் " என் வேலையை நீங்கள் செய்கிறீர்கள், அதனால் எனது சம்பளத்தையும் நீங்கள்தான் வாங்கிக் கொள்ளவேண்டும்" என்று கூறி திகைக்க வைத்தவர்.

அவர் ஒரு பழமைவாதி என்று சனாதனவாதி என்று இன்று சிலர் கூறுகின்றனர். அவர் என்று தனது கொள்கைகளை மறைத்து வேஷம் போட்டார் ? அவர் சரி என்று நினைத்தத்தைச் சொன்னார், எழுதினார். இந்த நாட்டுக்கு என்று ஒரு பாரம்பரியம் உண்டு, அதற்க்கு ஒரு சிறப்பு உண்டு என்று அவர் உளமார நம்பினார். போலி அறிவுஜீவிகள் போல நடித்து இருந்தால் அவருக்கும் உலகளாவிய புகழ் கிடைத்து இருக்கும், அது வேண்டாம் என்று நினைத்தார், தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்.

பெண்ணுரிமையை அவர் ஆதரிக்கவில்லை என்று சொல்வார்கள் எது உரிமை ? கட்டற்ற உரிமை என்பது எங்குமே இருக்க முடியாது. எல்லா உரிமைகளும் கடமைகளின் மீது அமைக்கப்பட்டவைதான். புகைபிடிப்பதும், மது அருந்துவதும், கட்டற்ற பாலியல் உறவு வைத்துக் கொள்வதும்தான் பெண்ணுரிமை என்று கூறுபவர்கள் அவர்கள் குடும்பத்து பெண்களுக்கு அதையா கூறுகிறார்கள் ?

அவர் எண்ணங்களை கூறப் பயன்படுத்தினாலும், எதிர்கருத்துக்களுக்கும் சோ இடம் அளித்தே வந்தார். அதனால்தான் வலதுசாரி கருத்துடைய திரு குருமூர்த்தி அவர்களின் கட்டுரைகளையும் அதே நேரத்தில் அதற்க்கு எதிரான கம்யூனிஸ்ட் தலைவர்களின் கட்டுரைகளும் துக்ளக்கில் வெளிவந்தன. பத்திரிகை என்பது அறிவார்ந்த விவாதங்களை உருவாகும் இடமாக இருக்கவேண்டும் அதற்க்கு எதிரும் புதிருமான தகவல்களைத் தரவேண்டும் என்பது அவர் கருத்தாக இருந்தது.

பல்வேறு தலைவர்கள் அவர்களது அரசியல் வாழ்க்கையைப் பற்றிய சித்திரங்களை துக்ளக்கில் எழுதி உள்ளனர். ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் மூத்த பிரச்சாரகர் திரு சூரியநாராயணராவும் திரு அப்துல் சமது அவர்களுக்குமான உரையாடல் ஆர் எஸ் எஸ் இயக்கம் பற்றிய ஒரு தெளிவை மக்களுக்குத் தந்தது.

எண்பதுகளில் விடுதலைப் புலிகளை பற்றித் தவறாகச் சொன்னாலே கிடைக்கும் வசைகளைத் தாண்டி அவர்கள் ஒரு தீவிரவாத இயக்கம் தான், அவர்களால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்காது என்று எச்சரித்தவர் சோ மட்டும்தான். அதைத்தான் இன்று கழகக் கண்மணிகளும் கூறுகின்றனர் என்பதுதான் நகைமுரண்.

சில ஆயிரம் விற்பனையாகும் பத்திரிகையின் ஆசிரியர் என்று சிலர் எழுதியதை பார்த்தேன். வீட்டு வாசல்படியில் பாலும், வரிசையில் இருந்து சாராயமும் விற்பனையாகும் மாநிலத்தில் ரோஜாப் பூக்கும் கள்ளிச் செடிக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

முழுவாழ்விலும் பிரிவினை சக்திகளுக்கு எதிராகவே சோ நின்றிருந்தார். ஹிந்து மதத்தைத் தாக்குவது ஒன்றே பகுத்தறிவு என்று பேசியவர்களின் இடையே நெற்றி நிறைய திருநீரோடு காட்சி அளித்தார்.

தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவர் எடுத்த நிலைப்பாடுகள் என்னால் ஏற்கமுடியாதவைதான் என்றாலும், எழுத்துக் கூட்டி வாசிக்க ஆரம்பித்த நாள்முதலாக பல வருடங்களாக நான் படித்த ஒரு பத்திரிகையின் ஆசிரியர், பெருவாரியான மக்களின் கருத்து எப்படி இருந்தாலும் என் நெஞ்சுக்கு சரியென்று தோன்றியதை எதற்கும் அஞ்சாமல் எடுத்துரைக்க வேண்டியதின் அவசியத்தைப் புரியவைத்தவர். நடுநிலைமை என்பது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது அல்ல, ஆனால் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அறிவுத்தியவர் அவர்.

சிலநேரங்களில் ஆசிரியர்கள் ஒரே  இடத்தில் நின்றுவிடலாம் , அவர்களைத் தாண்டி அவர்கள் கற்றுக்கொடுத்தவற்றில் சரியானவற்றை மாணவர்கள் முன்னெடுப்பதுதான் ஆசிரியர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும்.

சென்று வாருங்கள் ஆசிரியரே.
உங்களுக்கான இடம் இங்கே நிரப்பப்படாமலே இருக்கும்.

வலம் மாத இதழில் வெளியான கட்டுரை. 

சனி, 7 ஜனவரி, 2017

கறுப்புக் குதிரையும் கண்கட்டி வித்தையும் - I

ஏறத்தாழ 136 பக்கங்களும் இருபது அத்தியாயங்களையும் கொண்டு இந்தப் புத்தகத்தை நண்பர் நரேன் எழுதியுள்ளார். பொதுவாக பொருளாதாரம் என்பது படிப்பதற்கு விறுவிறுப்பில்லாத ஒரு விஷயம். அதை ஒரு துப்பறியும் நாவலுக்கு உண்டான வேகத்தோடு எழுதியதில் உண்மையிலே நரேன் வெற்றி அடைந்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஆற்றின் ஒழுக்கு போல எங்கேயும் தடைபடாத மொழி, நான் பார்த்தவரை வாக்கியங்களின் அமைப்பிலோ அல்லது சந்திப்பிழைகளையோ காணமுடியவில்லை. மிகச் சரியாக தொகுக்கப்பட்டு, பிழைத்திருத்தப்பட்ட நூல் இது. நரேன் அவர் வாத்தியாராகக் கொண்டாடும் சுஜாதாவின் நடை இதில் தெரிகிறது. ஆசிரியருக்கு ஏற்ற மானவர்தான்.

என் கையில் கிடைத்த மின்புத்தகம் போலவே அச்சுப் புத்தகமும் இருக்கும் என்றே நான் நினைக்கிறேன், அப்படியென்றால் புத்தகத்தின் மொழி மட்டுமல்ல அதன் வடிவமும் அநேகமாகக் குறைசொல்ல முடியாத ஒன்றுதான். வாழ்த்துகள் நரேனுக்கும், அரவிந்தனுக்கும்.

அதைவிட முக்கியமாக திரு நரேன் அவர்களை கடந்த மூன்றரை ஆண்டுகளாக   சுறுசுறுப்பாக வைத்திருக்கும் திரு மோடி அவர்களுக்கு என் பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.

இந்தப் புத்தகத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ளலாம். முதல் பிரிவு என்பது கள்ளப்பணம் என்பது இந்தியாவில் இருந்து வெளியேறி, மீண்டும் கணக்கில் வரவுவைக்கப்பட்டு வெள்ளைப்பணமாக இந்தியாவிற்குள் வந்துவிடும் என்பதை நிரூபிக்க முயன்ற பெரும்பகுதி.

இரண்டாவது பகுதியென்பது இந்த தாள்கள் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் ஏற்பட்ட இடர்கள் மற்றும் ஏன் இது சரியான நடவடிக்கை இல்லை என்று நிரூபிக்க முயற்சி செய்த பகுதி. இவை இரண்டிலும் திரு நரேன் சொல்ல மறந்த உண்மைகள் என்னவென்று நாம் பார்ப்போம்.

1, எது கறுப்புப் பணம் ? 

ஒரு நாட்டின் சட்டவிதிமுறைகளுக்குள் வராமல், வரி எய்ப்பின் மூலமும், வரி வளைப்பின் மூலமும் சேர்க்கப்படும் எல்லாமே கள்ளப்பணம்தான் ( பக்கம் 19 ) 

ஆனால் இதில் ஒரு சிறிய வேறுபாடு இருக்கிறது. சட்டத்தின் உட்பட்டு வருமானம் ஈட்டி, ஆனால் அதைக் கணக்கில் காட்டாமல் இருக்கும் கறுப்புப் பணம் என்பது ஓன்று, சட்டத்தை மீறி, சட்டத்திற்குப் புறம்பாக ஈட்டும் வருமானம் என்பது வேறு.

அதாவது ஒரு மருத்துவர் / வழக்கறிஞர் / ஆசிரியர் என்பவர் ஈட்டும் வருமானம் என்பது சட்டப்படி சரியானதுதான், அதைக் கணக்கில் காட்டாது வைத்திருப்பது என்பது ஓன்று.

அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சத்தின் மூலமாக ஊழலின் மூலமாக வரும் வருமானமும், தடைசெய்யப்பட்ட தொழில்கள் ( கள்ளச் சாராயம், போதைப் பொருள், ஆயத விற்பனை ) மூலம் வரும் வருமானமும் வெவ்வேறு.

முதலாவதில் சமுதாயப் பாதிப்பு என்பது அரசின் வரிவருவாய் இழப்பு என்பது தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் இரண்டாவதில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை முதல் வளர்ச்சிப் பணிகளின் பாதிப்பு வரை உண்டு.

இன்றய காலகட்டத்தில் ( 2017 ஜனவரி ) இந்தியாவின் மக்கள்தொகை 133 கோடி. ஒரு குடும்பம் என்பதில் ஐந்து பேர் இருக்கிறார்கள் என்றால் 26.6 கோடி குடும்பங்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். இதில் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டுபவர்கள் மூன்று கோடியே அறுபத்திஐந்து லட்சம் தனிநபர்கள் மட்டுமே. நிறுவனங்கள், பிரிவுபடாத ஹிந்து குடும்பங்கள் ( HUF ), மற்றவர்கள் என்று மொத்தம் மூன்று கோடியே தொன்னூற்று ஒரு லட்சம் கணக்குகள் வருமானவரித்துறையிடம் உள்ளது.

இவர்களில் ஒரு கோடியே ஐம்பத்திஐந்து லட்சம் கணக்குகளில் காட்டப்படும் வருமானம் என்பது இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் குறைவு, அதாவது இதில் வரி என்பதே கிடையாது.

அதாவது 133 கோடி மக்கள் உள்ள நாட்டில் வருட வருமானம் இரண்டரை லட்சத்திற்கு மேல் என்று கணக்கு காட்டுபவர்கள் எண்ணிக்கை இரண்டு கொடியே முப்பத்தி ஐந்து லட்சம் மட்டுமே. அதாவது மொத்த மக்கள்தொகையில் 1.76% மக்கள்தான் வருமான வரிக்கு மேலே வருமானம் ஈட்டுகிறார்கள் என்று கணக்கு இருக்கிறது

2, வரிவிகிதம்தான் காரணமா ? 

இன்றய நிலையில் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் வருமானம் ஈடுபவர் எந்த வித சலுகையும் பெறாவிட்டால் அவர் செலுத்தவேண்டிய வரி என்பது மாதம் ஒன்றுக்கு பதினைந்தாயிரம் ரூபாய்தான். இதையே அரசுத்தரும் சலுகைகளை முறையாகப் பயன்படுத்தினால், இந்த வருமானத்திற்கு வரியே செலுத்தவேண்டாம் என்பதுதான் உண்மை.எனவே வருமானவரிதான் கள்ளப்பணத்திற்குக் காரணம் என்பதும் ஒரு தவறான வாதம்தான்.

3, கறுப்புப்பணம் தாளாக இருக்காதா ? 

நண்பரின் அடுத்த வாதம் கறுப்புப்பணம் ரொக்கமாக இருக்காது, அது நகைகளாக, தங்கமாக, நிலங்களாக மாறிவிடும். மேலும் அவை வெளிநாட்டுக்குச் சென்று மீண்டும் கணக்கில் காட்டப்பட்ட பணமாக இங்கேயே வந்துவிடும் என்கிறார்.

பல்லாயிரம் கோடி கருப்புப்பணத்தை சலவை செய்யும் வழிமுறைகளை பற்றிப் பேசத்தான், இந்த நூலின் பெரும்பான்மையான பக்கங்கள் செலவிடப்பட்டு இருக்கிறது. பல வழிகள் நூலாசிரியருக்குத் தெரியும் என்பதும், தேவைப்படுபவர்கள் அவரை அணுகலாம் என்பதும்தான் எனக்குப் புலனாகிறது.

சரி, என்னிடம் பத்து கோடி ரூபாய்க்கு கணக்கில் காட்டாத பணம் இருக்கிறது. அதை யாரோ ஒருவரிடம் கொடுத்து அதை ஆசிரியர் கூறுவது போல வெளிநாட்டுக்கு அனுப்பி மீண்டும் இந்தியாவுக்கே கொண்டுவருகிறேன், இல்லை வரியில்லா சொர்க்கங்களில் அதை வேறு ஒரு நாட்டின் பணமாக வைத்துக் கொள்கிறேன் என்றே எடுத்துக் கொள்வோம். நான் இங்கே கொடுத்த பணம், இந்திய நோட்டுக்களாகவேதானே இருக்கும், அதை முழுவதும் இங்கேயே கணக்கில் கொண்டுவர முடியுமா ? இந்தப் பணம் தான் மீண்டும் மீண்டும் கருப்புப்பணமாக சுழன்று மீண்டும் மீண்டும் வரிஏய்ப்பு செய்பவர்களின் வழியாக சுற்றி வருகிறது.

இன்று இந்த நோட்டுகள் செல்லாது என்றான பிறகு, மீண்டும் இந்த அளவிலான கறுப்புப் பணத்தை உருவாக்க எத்தனை காலம் ஆகும் ?

ஒரு சட்டமன்றத் தேர்தலின் போது எல்லாக் கட்சிகளும் சேர்ந்து செலவழிக்கும் மொத்த தொகை எவ்வளவு ? ஒரு நாடாளுமன்றத்தேர்தலின் போது தொகுதிக்கு எத்தனை பணம் கைமாறுகிறது ? எல்லாப் பணமும் தங்கமும், நகைகளும், நிலங்களுமாக மாறி இருந்தால் தேர்தலுக்குத் தேர்தல் அவைகளை விற்றா பணம் புழக்கத்திற்கு வருகிறது ? அப்படி என்றால் தேர்தல்களின் போது நிலங்களின் விலையும், தங்கத்தின் விலையும் குறைகிறதா என்ன ?

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். திருநெல்வேலி போன்ற ஒரு சிறிய நகரத்தில் உள்ள ஒரு ஆசிரியர் தனிப்பயிற்சியில் சம்பாதிக்கும் பணம் எவ்வளவாக இருக்கும் என்று ஒரு கணக்கைப் பாப்போம். வாரத்திற்கு மூன்று நாட்கள் நடக்கும் தனிப்பயிற்சிக்கு ஒரு மாணவருக்கு கட்டணம் குறைந்தபட்சம் ரூபாய் அறுநூறு. ஒரு பயிற்சி வகுப்பில் குறைந்தது இருப்பது மாணவர்கள், நாள் ஒன்றுக்கு இரண்டு வகுப்புகள் என்றால் கணக்கில் காட்டாது அவருக்கு வரும் வருமானம் ( 2 வகுப்புகள் X 20 மாணவர்கள் X ரூ 600 ) அதாவது ரூ 24,000/- இது திங்கள், புதன், வெள்ளி அன்று நடக்கும் பயிற்சியின் மூலம் வரும் வருமானம், இதேபோல செவ்வாய், வியாழன், சனி அன்று நடக்கும் வகுப்பில் இன்னொரு ரூ 24,000/- அதாவது மாதம் ஒன்றுக்கு ரூ 48,000/- ஒரு வருடத்தில் பத்து மாதங்கள் அவர் சம்பாதிக்கும் பணம் ஏறத்தாழ ரூபாய் ஐந்து லட்சம். சர்வ நிச்சயமாக இது சட்டத்திற்கு உள்பட்டு நேர்மையான முறையில் சம்பாதிக்கும் பணம்தான். ஆனால் முறையாக கணக்கு காட்டப்படாதது.

நரேன் சொல்வது போல இவர் வரியில்லா சொர்கங்களில் நிறுவனங்கள் ஆரம்பித்து, இந்தப் பணத்தை மாற்றப்போவது இல்லை. அவர் கப்பலைக் கவிழவைத்து காப்பீடு நிறுவனங்களை ஏமாற்றி இந்தப் பணத்தை சலவை செய்யப்போவது இல்லை. எங்கே போனது இந்தப்பணம் என்பதை ஆசிரியர் கூறுவாரா ?


4, கப்பல் கரைதட்டி காப்பீடு வாங்க முடியுமா ? 

சரக்குகளை அனுப்பாமல் காப்பீடு செய்து, சரக்கு போன கப்பல் கடலில் கவிந்தது என்று ஆதாரங்களைக் காட்டி, இல்லை கடற்கொள்ளையர்களால் கொள்ளை போனது என்று கூறி காப்பெடு நிறுவனங்களை ஏமாற்றி இழப்பீடு பெற்று, அந்தப் பணத்தை வெள்ளையாக்கலாம் என்று கூறி இருக்கிறார்.

கொக்கு தலையில் வெண்ணையை வைத்து, அது உருகி கொக்கின் கண்ணை மறைக்கும், அப்போது கொக்கைப் பிடிக்கலாம் என்று சொல்வதுபோலதான் இது.

காப்பீடின் ஆரம்பமே கடல்வழி வணிகத்தை காப்பீடு செய்வதில்தான் ஆரம்பமாகிறது. ஒரு பொருளைக் காப்பீடு செய்வதற்கு முன் காப்பீடு நிறுவனம் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றித் தெரியாதவர்கள்தான் இப்படி எழுத முடியும்.

கப்பல் எந்த நிறுவனத்திற்குச் சொந்தமானது, அதன் வயது என்ன, அது எங்கே இருந்து எங்கே செல்கிறது, அது பயணம் போகும் பாதை எது, அது நிறுத்தப்படும் துறைமுகங்கள் எவை, அதில் செல்லும் சரக்குகள் எவை இதுபோன்ற பல கேள்விகளைக் கேட்டு, பல விஷயங்களைத் துருவித் துருவி விசாரித்துவிட்டுதான் காப்பீடு வழங்கப்படும்.

சாதாரணமான இழப்புகளுக்கு நஷ்டஈடு வழங்கவே நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை தெரியாதவர்கள்தான் இப்படி எழுத முடியும்.

சில கசப்பான உண்மைகள்

இன்றய நிலையில் ஒரு சாதாரண தொழில் தொடங்கவேண்டும் என்றால் விற்பனைவரித்துறையில் பதிவு எண் பெறவேண்டும். அதற்கே லஞ்சம் தரவேண்டும். அதிலிருந்து அரசாங்கத்தோடு பொதுமக்கள் இடையேயான தொடர்பின் எல்லாக் கண்ணியிலும் லஞ்சம் இல்லாமல் எதுவும் நடைபெறுவது இல்லை. இப்படிப் பெறப்படும் பணம் எல்லாமே கறுப்புப் பணம்தான்.

வெவ்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் கையில் பணத்தோடு அதை மாற்ற வழிதேடி அலைந்தது உண்மைதானே.

கோடிக்கணக்கில் கறுப்புப் பணம் வைத்து இருப்பவர்களை பிடியுங்கள், பிறகு பொதுமக்களிடம் உள்ள பணத்தைப் பார்க்கலாம் என்று சில அறிவாளிகள் கூறுகின்றனர்.

இதே அளவுகோலை வைத்தால், கோடிக்கு மேல் உள்ள திருட்டை மற்றும் காவல்துறை கணக்கில் எடுத்தால் போதுமா ? இல்லை கொலைகளைத் தவிர வேறு குற்றங்களைக் கண்டிக்காமல் விட்டுவிடலாமா ?  குற்றம் என்பது அதன் அளவைப் பொறுத்தது என்பதே தவறான வாதம்.

விவசாய விலை வீழ்ச்சி

மஹாராஷ்டிரா மாநிலத்தின் மாலேகாவ் தாலுகாவில் வெங்காய சந்தையும், மத்திய பிரதேசத்தின் மிர்ஜாபூர் பூ வியாபாரமும் இந்த நடவடிக்கையால் நிலைகுலைந்து போய் விட்டன. இதுபோல இந்தியாவை முழுவதும் விவசாயிகள் தங்கள் பொருள்களுக்கு சரியான விற்பனை விலை கிடைக்காமல் நஷ்டம் அடைகிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்.

விவசாயிகளுக்கு லாபம் இருக்கவேண்டும் என்பதிலோ அல்லது விவசாயம் லாபமான தொழிலாக இருக்கவேண்டும் என்பதிலோ இருவேறு கருத்துக்கள் இல்லை.

ஆனால் இந்த விலை குறைவு என்பது விவசாயிகளிடம் இருந்து மொத்த வியாபாரிகள் வாங்கும் விலையா இல்லை இறுதியான நுகர்வோர்களுக்கு கிடைக்கும் விலையா என்று அவர் கூறவில்லை. எனக்குத் தெரிந்து காய்கறிகளின் விலையில் பெரிய மாறுதல் எதுவும் நிகழவில்லை.

பொதுவாகவே உணவுப் பொருள் வணிகத்தில் வியாபாரிகள்தான் லாபம் அடைகிறார்கள் என்ற ஒரு பேச்சு இருக்கிறது.

அதுபோக அதிகமான விளைச்சல் என்றால் அப்போது விளைபொருள்களை பாதுகாக்கும் குளிர்சாதன பெட்டகங்களும், அந்த விளைபொருள்களை மதிப்புகூடப்பட்ட பொருள்களாக மாற்றுவதன் மூலமே இந்த நிலையை மாற்றமுடியும்.

சுற்றுலா : 

அரசின் இந்த முடிவால் சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டு உள்ளது. கோவாவின் கடற்கரைகளில் ஆளே இல்லை என்று எழுதி இருக்கிறார். ஆனால் உண்மை இதற்க்கு மாறாக இருக்கிறது. நவம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒன்பது சதவிகிதத்திற்கும் மேலாக வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

தொடருவேன்  

வியாழன், 5 ஜனவரி, 2017

முன்னுரைக்கு ஒரு மறுப்புரை

பொதுவாக ஒரு புத்தகத்தை விமர்சிக்கும்போது, அந்தப் புத்தகத்திற்கான முன்னுரைக்கு விமர்சனம் எதுவும் வராது. ஆனால் இந்தப் புத்தகமும் அதன் முன்னுரையும் அந்த வரைமுறையில் அடங்காது.

பேசத்தெரிந்தவர்கள் பேசும்போது பொய்கூட உண்மையைப்போல காட்சி அளிக்கும். உண்மை வீட்டைவிட்டு இறங்கும் முன்னர் பொய் உலகைச்  சுற்றி வந்து விடும் என்று ஒரு பழமொழி உண்டு. 

இந்தப் புத்தகத்தின் ஆசிரியரும், அதற்க்கு முன்னுரை எழுதியவரும் நன்கு பேசத் தெரிந்தவர்கள், நன்றாக எழுதத் தெரிந்தவர்கள். பேசியே ஆட்சியைப் பிடித்த கட்சிக்காரர்களுக்கு பேசவும் எழுதவும் யாராவது கற்றா தரவேண்டும் ? 

ஆனால் உண்மை ஒருநாளும் உறங்காது, இருண்ட மேகங்களைக் கிழித்து உண்மை எனும் ஒளி எப்போதுமே பிரகாசமாகத்தான் இருக்கும் என்பதே இந்த உலகம் கண்ட உண்மை. 



அருமை நண்பர் புதுக்கோட்டை அப்துல்லா இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதி உள்ளார். அவரது முன்னுரையில் " பாஜக ஆட்சி அமைப்பதற்கு முன்னர் 9% இருந்த பொருளாதார வளர்ச்சி இப்போது 4% கீழே சென்று விட்டது" என்று எழுதிச் சென்று இருக்கிறார். நமது அலசலை இந்த வரியில் இருந்து ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன், அதனால்தான் ஒருநாளும் இல்லாத திருநாளாக முன்னுரைக்கு ஒரு மறுப்பு தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.  

2011 - 2012 ஆண்டுக்கான நிதி அறிக்கை முதல் 2016 - 2017 ஆண்டுக்கான நிதி அறிக்கைவரை மத்திய அரசு ஒத்துக்கொண்ட, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த உண்மை அவர்கள் ( காங்கிரஸ் மற்றும் பாஜக நிதிமந்திரிகள் )வாய்மொழியாக இங்கே 

Key Features of Budget 2011-2012
Gross Domestic Product (GDP) estimated to have grown at 8.6 per cent in 2010-11 in real terms. Economy has shown remarkable resilience.
Indian economy expected to grow at 9 per cent with an outside band of +/- 0.25 per cent in 2011-12

Key Features of Budget 2012-2013
GDP is estimated to grow by 6.9 per cent in 2011-12, after having grown at 8.4 per cent in preceding two years
GDP growth estimated at 6.9 per cent in real terms in 2011-12. Slowdown in comparison to preceding two years is primarily due to deceleration in industrial growth.
India’s GDP growth in 2012-13 expected to be 7.6 per cent +/- 0.25 per cent

Key Features of Budget 2013-2014
Getting back to potential growth rate of 8 percent is the challenge facing the country.
Slowdown in Indian economy has to be seen in the context of slowing global economic growth from 3.9 per cent in 2011 to 3.2 per cent in 2012.

Budget 2014-2015
The steps that I will announce in this Budget are only the beginning of a journey towards a sustained growth of 7-8 per cent or above within the next 3-4 years along with macro-economic stabilization that includes lower levels of inflation, lesser fiscal deficit and a manageable current account deficit

Key Features of Budget 2015-2016
After inheriting an economy with sentiments of “doom and gloom” with adverse macroeconomic indicators, nine months have seen at turn around, making India fastest growing large economy in the World with a real GDP growth expected to be 7.4% (New Series)
GDP growth in 2015-16, projected to be between 8 to 8.5%.

Key Features of Budget 2016-2017
Growth of Economy accelerated to 7.6% in 2015-16.

இதற்கான சுட்டிகள் 

Budget 2011 – 2012  

Budget 2012 – 2013  

Budget 2013 – 2014
  
Budget 2014 – 2015
  
Budget 2015 – 2016
  
Budget 2016 – 2017

ஆக காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 9% மேலாக இருந்தது என்பது உண்மைக்கு மாறான கூற்று. இப்போதைய வளர்ச்சி விகிதம் 4% கீழே என்பதும் உண்மை இல்லை.

பொருளாதார வளர்ச்சிக்கான அளவுகோலை இந்த அரசு மாற்றிவிட்டது, எனவே பாஜக அரசு கூறும் வளர்ச்சி சதவிகிதம் என்பது உண்மை இல்லை என்று இப்போது நண்பர் அப்துல்லா கூறுவார். 

ஆமாம், பொருளாதார வளர்ச்சிக்கான அளவுகோல் மாற்றப்பட்டு உள்ளது. எதையோ ஒன்றை அடிப்படியாக வைத்து, அந்த அளவுகோலின் படி வளர்ச்சியா வீழ்ச்சியா என்றுதான் எதையும் கூறமுடியும். அதாவது அம்பானியையுடன் ஒப்பிட்டால்  நான் ஏழை, ஆனால் என் அருகில் இருப்பவரைப் பார்த்தால் நான் பணக்காரன் என்பதுபோல்தான். 

இந்த அளவுகோலுக்கான ஆண்டு மாற்றப்பட்டு உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கான அளவுகோல் 2004 - 2005ஆம் ஆண்டில் இருந்து 2011 - 2012ஆம் ஆண்டு என்று மாற்றப்பட்டு உள்ளது.

உதாரணமாக இருபது ஆண்டுகளுக்கு முன்னால் பொருளாதாரத்திற்குப் பங்களித்த துறைகளின் போக்கு முழுவதுமாக மாறி, பல புதியதுறைகள் பொருளாதாரத்தின் போக்கை நிர்ணயம் செய்யும். உதாரணமாக கணினித் துறை, தொலைத்தொடர்ப்பு, புதியமுறையில் மின்சாரம் உற்பத்தி செய்வது, கணினி நிரல் எழுதுவது என்பது போன்ற துறைகள் மிகச் சமீபகாலத்தில் பெரும்பாய்ச்சலைக் கொண்டுவந்து உள்ளது. எனவே பழைய முறைகளை வைத்து புதிய காலத்தின் போக்கைக் கணிப்பது என்பது சரியான முறையாக இருக்காது.

உதாரணமாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் என்பதை அளக்கும் நிறுவனங்களின் பட்டியல் என்பது காலத்திற்கேற்ப மாற்றப்படுகிறது. அதுபோல பொருளாதார வளர்ச்சியை முன்னர் ஒரு தொழில்சாலையின் மொத்த உற்பத்தியின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிடப்பட்டது, இப்போது அதன் பொருளாதார மதிப்பை வைத்து அழைக்கப்படுகிறது.

அதுபோல, உத்தேசமாக ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு உள்ளாக இந்த அளவுகோல் வருடம் மாற்றப்படுகிறது. இந்த முறை நடந்த மாற்றத்தையும் சேர்த்து சுதந்திர இந்தியாவில் இதுவரை அளவுகோல் ஆண்டு ஏழு முறை மாற்றப்பட்டு உள்ளது. மாற்றமே தவறு என்றால் இதற்க்கு முன்நடந்த ஆறு மாற்றங்களுக்கு யாரைக் காரணம் காட்ட ? 

அதுபோக ஒரு அரசாங்கம் என்பது ஒரு நிரந்தரமான ஓன்று, It is a perpetual entity. ஒரு கட்சியின் ஆட்சி மாறி இன்னொரு கட்சி ஆட்சிக்கு வரும்போது முன்னால் இருந்த கட்சியின் எல்லா நடைமுறைகளையும் மாற்ற முடியாது, முந்தைய ஆட்சி அளித்த எல்லா உத்திரவாதங்களையும் இல்லை என்று கூறிவிட முடியாது. இங்கே இந்த மாற்றத்தை முன்னெடுத்தது முந்தய காங்கிரஸ் அரசாங்கம்.

எனவே இன்றய பாஜக அரசு அளவுகோலை மாற்றி ஏமாற்றிவிட்டது என்றால், நீங்கள் கேள்வி கேட்கவேண்டியது மன்மோகன் சிங் அவர்களின் தலைமையிலான காங்கிரஸ் அரசைத்தான், இன்றய அரசை இல்லை. அன்றய அரசின் கொள்கைமுடிவை இந்த அரசு செயல்படுத்தி உள்ளது. 

சரி பழையமுறைப்படி வளர்ச்சி விகிதத்தைக் கணக்கிட்டால் வளர்ச்சி 4% கீழாகவா இருக்கிறது. இந்தச் சுட்டி வளர்ச்சி விகிதம் 5.2% என்று கூறுகிறது. 

பொருளாதார வளர்ச்சிக்கான அளவுகோல் ஆண்டு பற்றித் தெரிந்துகொள்ள 

http://indianexpress.com/article/india/india-others/explained-the-base-of-growth

http://www.affairscloud.com/base-year-concept/

http://www.firstpost.com/business/devil-in-the-detail-choice-of-base-year-in-new-gdp-series-and-revisions-need-clarity-2301386.html

முன்னுரைக்கே ஒரு மறுப்புரை தேவையா, அதுவும் முன்னுரையில் வரும் ஒரு வரியை வைத்துக்கொண்டு அதை இப்படி மறுக்கவேண்டுமா என்ற கேள்வி எழலாம். ஆனால் இந்தப் புத்தகத்தின் கருதுகோளே திரு அப்துல்லா எழுதிய முன்னுரையின் இந்த வரியை முன்வைத்துதான் இருக்கிறது, எனவே இந்தப் புத்தகத்தை மறுக்க, முதல் வாதமாக இந்த வரியை மறுத்துதான் ஆகவேண்டும்.  

இந்தப் புத்தகத்தில் நண்பர் நரேன் கூறாமல் விட்ட உண்மைகள் பற்றியும், திரித்துக் கூறியது பற்றியும் அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

இருளில் இருந்து உண்மைக்கான பயணத்தில் 
இறுதிவரை நடைபோடும் உறுதியை 
ஆண்டவா, 
எப்போதும் எனக்கு அருள்க    



விளக்கம் : 

திரு அப்துல்லா அவர்கள் தற்போதைய வளர்ச்சி விகிதம் 6% என்றும் கச்சா எண்ணெய் விலை 40 டாலர் என்றுதான் எழுதி இருந்தார், ஆனால் புத்தகம் அச்சாகும்போது மாறிவிட்டது என்று என்னிடம் கூறினார். 

இந்த மறுப்பு என்பது புத்தகத்தில் வெளியான தகவலை வைத்து மட்டுமே எழுதப்பட்டு இருக்கிறது.